3
ஒரே அம்மா
1967/68
நாகர்கோயிலில் ஒரு நண்பர் வீட்டில், நான் குடும் பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில், ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களில் அவரைச் சந்தித்ததோடு எங்கள் பரிசயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு, விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோசம் எங்களுக்கிடையே இடறிற்று. ஆனால் நண்பரின் தாயாரைச் சந்திக்கும் பெரும் பேறு எனக்கு கிடைத்தது. அந்த அம்மா என் நாவல் 'புத்ர'வைப் படித்திருந்தார்; என்று சொன்னால் மட்டும் போதாது. ஆங்காங்கே வாக்கியங்களை ஒப்பித்து ரசித்து மகிழ்ந்தார். அதுவும் பெரிதல்ல. புத்தி பூர்வமாக இலக்கிய ரீதியில் வாழ்க்கை யையே நோக்கப் பழகிக்கொண்ட பக்குவ மனம்- அதுவும் பெண்டிரில் காண்பது மிக மிக அரிது என்று என் கருத்து. அந்த மூன்று நாட்களும் எனக்கு மிக்க சந்தோஷமான நாட்கள்.
கன்யாகுமரியின் காந்தம் சாதாரணமன்று; மறு வருடமும், ஆனால் நான் மட்டும் தனியாக தஞ்சை, திருச்சி, மதுரை என்று ஆங்காங்கே தங்கி, ரசிக நண்பர்களுடன் அளாவி... அது தனிக் குஷிதான்.