419
ஆடு வார்சிலர் மயிலென
ஆடலுக்கு அழகாய்க்
கூடு வார்சிலர் கிளியெனக்
கூடலின் குறிகண்
மூடு வார் சிலர விரிதரும்
கமலமென் முகத்தார்." [1]
இப்பாடலில் பாடுவார், ஆடுவார், கூடுவார், மூடுவார் எனும் சொற்களும் கருத்துக்களும் திரும்பத் திரும்பத் தொடர்பாக வந்து மாலையாக அமைந்து மகிழ்வூட்டுகின்றன.
நீதியும் பழமொழியும்
நீதிகளும் நெறிமுறைகளும் உவமைகளில் பொதிந்துள்ளன.
"ஓங்கு மாநில மாக்களில் ஒருவருக் கொருவர்
தீங்கி யற்றிட நினைத்திடுங் கொடியஅத் தீமை
நீங்கிடாது அவர் உயிரினைப் பருக நேரலர்கை
தாங்கும் வாளென வொல்லையில் உறச் சமைந்திடுமே." [2]
"ஈர மற்றபுன் மனச்சிறி யவர்திரண்டு இகலிக்
கோர மாகிய பழியையெண் ணாக்கொடுங் கொலையாய்த்
தேரு நல்லறிவாளருக்கு இழைத்திடும் தீங்கு
நீரி டைக்கனல் நெருப்புகுத் திடுவது ஒத்திடுமே.” [3]
எனும் பாடல்களில் தூயவர்க்குக் கேடுசெய்யும் தீயவர் படும் துன்பமும் தூயவர்க்குச் செய்யப்படும் கேடு அழிந்தொழிவதும் ஆகிய நீதிகள் உவமைகளால் உணர்த்தப்படுகின்றன.