பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னஞ் சிறு பெண்

11



தோன்றியது. இந்த உணர்வினால் பிறந்த பேரின்பம் என்னை ஆட்கொண்டது.

“ஊர் பூராவும் எங்கள் வீட்டில் வந்து கூடிவிட்டது. முற்றத்திலும், பாதை நெடுகிலும் பரவி நின்றது. என்ன? இப்படி நடக்குமா?” என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். எல்லோருக்கும் அவளிடம் அவ்வளவு பிரியம்.”

“அது மாதிரி ஒரு பெண்ணை வேறு எங்கே காண முடியும்?” என்று பெரு மூச்சு விட்டான் கிழவன்.

“எல்லா மக்களும் கூடி அவளுக்கு உரிய இறுதிச் சடங்குகளைச் செய்தார்கள். நாற்பது தினங்கள் முடிந்த போது தான் எங்களுக்கு இந்த எண்ணம் வந்தது. அவள் ஆத்மாவின் நலத்திற்காகப் பிரார்த்தனை புரிய நாம் ஏன் யாத்திரை போகக் கூடாது என்று எண்ணினோம். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், நீங்கள் ஏன் போகக்கூடாது என்று கேட்டார்கள். போங்கள். நீங்கள் சுதந்திரம் உடையவர்கள். உங்களை இங்கே கட்டிப் போட்டிருக்கும் பிணைப்புகள் பிடிப்புகள் எதுவுமே கிடையாது. ஒரு வேளை உங்கள் பிரார்த்தனை அவளுக்கு நன்மை புரியக்கூடும்” என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவே நாங்கள் கிளம்பினோம்.”

"அவளுக்காகத்தானா நீங்கள் இந்த யாத்திரை செய்கிறீர்கள்? அப்படியா?” என்று நான் கேட்டேன்.

"அவளுக்காகத்தான். அருள் பெற்ற அந்தக்குழந்தைக்காகத்தான். நாங்கள் பாபிகளாக இருக்கலாம். இருந்தாலும் கூட, அன்புக்குரிய ஆண்டவன் எங்கள் பிரார்த்தனைகளுக்கு இரங்கி அவளை அவளது பாபத்திலிருந்து விடுவித்து விடுவார். நாற்பது நாள் உபவாசத்தின் முதல் வாரத்தில் நாங்கள் புறப்பட்டோம். அன்று செவ்வாய்க்கிழமை”