பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii


தனது சொந்த உணர்ச்சிகளை எழுதும்படி கார்க்கிக்கு அந்த ஆசிரியர் சொன்னார். அதன்படி எழுதப்பெற்ற கதைகள்தான் கார்க்கியின் கதைகள்.

கார்க்கி நிறையப்படித்தவர். அதைவிட அதிகமாக அலைந்து திரிந்து அனுபவம் பெற்றவர். விதம் விதமான மனிதர்களைச் சந்தித்துப் பேசிப் பழகினார் அவர். சமுதாயத்தின் அகல பாதாளத்தில் கிடந்து அவதியுற்றவர்களையும், மனிதராக வாழ முடியாமல் மனமுடைந்து சீரழிந்தவர்களையும், இவர்களை ஒத்த பிறரையும் கண்டு, அவர்களின் சிறுமை வாழ்வின் மூல காரணங்களை உணர்ந்து மனம் கசந்து குமைந்தவர் கார்க்கி. ஆகவே, அவர்களைப் பற்றி உணர்ச்சி நிறைந்த இலக்கியம் படைத்தார் அவர்.

“கார்க்கியின் கதைகள் பெரும்பாலானவை சோகமயமாகவே உள்ளன. கசப்பு உணர்ச்சியைத்தான் சித்திரிக்கின்றன. ஆயினும், மனிதவர்க்கத்திடம் பற்றுதலும் நம்பிக்கையும் உடையவர் அவர் என்பதை அவருடைய எழுத்துக்களின் மூலமே நாம் உணர முடியும்”. இவ்விதம், ரஷ்ய எழுத்தாளர் ஒருவர் அண்மையில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். கார்க்கியின் இலக்கிய சிருஷ்டிகளைப் படித்தவர்கள் இக்கூற்றின் உண்மையை நன்கு உணர்க்கிருப்பார்கள். ‘ஆர்லோவ் தம்பதிகள்’ முதலிய கதைகளைப் படிக்கிறவர்களும் ஒரளவு உணர முடியும்.

“மனிதன் செய்து முடிக்கும் சாதனைகள் பலவற்றிலும் மிகவும் அற்புதமான அருஞ்செயல் நல்லவனாக வாழ்வது தான். இதைப் புரிந்து கொள்ள நாம் விரும்புவதே இல்லை. பார்க்கப் போனால், மனிதர்கள் நல்லவராக வாழ வேண்டும் என்று வலியுறுத்த உண்மையான காரணம் எதுவுமே கிடையாது. அன்பும் மனிதத் தன்மையும் தகுந்த ஆதரவைப் பெறுவது இல்லை. அவை இயற்கை விதிகளினாலும் ஆதரிக்கப்படுவதில்லை; சமூகவாழ்க்கை அமைப்பு முறைகளாலும் போற்றப்படுவதில்லை. இருப்பினும்,