பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவண் வைத்திருந்த சிறுவன்
பீஷம் ஸாஹனி


பள்ளியில் எங்கள் வகுப்பில் இருந்த பையன்கள் ஒரு விசித்திரக் கலவை. ஹர்பன்ஸ் லால் என்றொரு பையன். கடினமான கேள்வி கேட்கப்பட்டால், அவன் தனது மைப்புட்டியிலிருந்து சிறிது மையை உறிஞ்சுவான். அது தன் அறிவை கூர்மைப்படுத்தும் என அவன் நம்பினான். ஆசிரியர் அவன் கன்னத்தில் அறைந்தால், "கொலை! உதவி!" என கூச்சலிடுவான். அதைக் கேட்டுப் பக்கத்து வகுப்புகளிலிருந்து ஆசிரியர்களும் பையன்களும் என்ன நடந்தது என்று காண ஒடிவருவார்கள். இது ஆசிரியருக்கு குழப்பம் தரும் ஆசிரியர் அவனைப் பிரம்பால் அடிக்க முயன்றால், அவன் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவான்: "என்னை மன்னியுங்கள், மாட்சிமை மிக்கவரே! நீங்கள் மகா அக்பர் போன்றவர். நீங்கள் தான் அசோக சக்ரவர்த்தி. நீங்கள் தான் என் அப்பா, என் தாத்தா, கொள்ளுத் தாத்தா."

இது பையன்களைச் சிரிக்க வைக்கும். ஆசிரியரை முகம் மாறச் செய்யும். இந்த ஹர்பன்ஸ் லால் தவளைகளைப் பிடிப்பான். தவளை கொழுப்பை உங்கள் கைகளில் தேய்த்துக் கொண்டால், ஆசிரியரின் பிரம்படி உறைக்கவே உறைக்காது" என்று எங்களிடம் சொல்வான்.

ஆனால், போதி ராஜ் தான் எங்கள் வகுப்பில் மிக விசித்திரமானவன். நாங்கள் எல்லோரும் அவனுக்குப் பயப்பட்டோம். அவன் ஒருவரின் கையைக் கிள்ளினால், அந்தக் கை, பாம்பால் கடிபட்டது போல் வீங்கி விடும். அவன் ஈவு இரக்கமில்லாதவன். ஒரு குளவியை வெறும் விரல்களால் பிடித்துவிடுவான். அதன் கொடுக்கை நீக்கி, குளவியை ஒரு நூலில் கட்டி, பட்டம் போல் பறக்க விடுவான். பூ மீது இருக்கிற வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து, தன் விரல்களால் நசுக்கிக் கொல்வான். அல்லது, அதன் உடம்பில் குண்டுசியைச் செருகி, அதை தன் நோட்டுப்புத்தகத்தில் வைப்பான்.

ஒரு தேள் போதி ராஜைக் கொட்டினால், அந்தத் தேள்தான் செத்து விழும் என்று சொல்வார்கள். போதி ராஜின் இரத்தத்தில் விஷம்