பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"இருக்கலாம். சாப்பிட்டானதும் எச்சில் இலைகளை விட்டெறியப் போகிற போது அது என் மேலே பாய்ந்தால் என்ன பண்ண? நான் புனிதம் அடைய கங்கை நதியில் குளிக்கப் போக வேண்டும்."

"அது சின்னக் குட்டியாக இருக்கிற போதே அதுக்குப் பயிற்சி அளித்தால் நிச்சயம் அது கற்றுக் கொள்ளும். அது உன் வழிக்கு வராதபடி நான் கவனித்துக் கொள்கிறேன்."

பாட்டி மிக அதிருப்தி கொண்டாள். நீ முடிவு பண்ணி விட்டாய் என்று புரிகிறது என்றாள்.

"அம்மா, நான் உன்னைப் பயமுறுத்த விரும்பவில்லை. ஆனால் எங்கும் திருட்டு அதிகரித்து வருகிறது. ஒரு நாய் இருப்பது பத்து காவல் காரனுக்குச் சமம். நாய், தின்னும் சோற்றுக்கு விசுவாசத்தோடு இருக்கும்."

"உன் இஷ்டம் போல் செய்," என்று கூறியபடி பாட்டி அகன்றாள். அப்பா என்னை நோக்கி, "நீ என்ன சொல்கிறாய், லீலு?" என்று கேட்டார்.

"வீட்டில் ஒரு நாய் இருப்பது நல்லது தான். நாய் வளர்க்க வேண்டும் என்று எனக்கு எப்பவும் ஆசை” என்றேன்.

ஒரு நாள் சென்னா நல்ல சாதி நாய் ஒன்று கொண்டு வந்தான். அதை அவன் தன் மார்போடு அணைத்திருந்தான். அவன் என்னைக் கூப்பிட்டான்.

"நான் கொண்டு வந்திருப்பதைப் பார்! இது அழகாக இல்லை? பாவம், அது பயந்து எங்களிடமிருந்து விலகியது. அது ரொம்பவும் கறுப்பு. இருட்டில் அதைக் கண்டு கொள்ள முடியாது, அப்படிக் கறுப்பு. அதன் உடலில் ஒரு வெள்ளை மயிர் கூடக் கிடையாது. கறுப்பாய் பட்டுப் போல் மினுமினுத்தது அது. அதன் சிறு உடலுக்கு மிகப் பெரிய காதுகள். ஒளி நிறைந்த பச்சைநிறக் கண்களுக்கு இரு புறமும் அவை தொங்கின. அதனிடம் எனக்குப் பிரியம் ஏற்பட்டது.

சென்னா, இது ரொம்ப அழகு இதன் முகம் மின்மினி மாதிரிப் பளபளக்கிறது பார். நான் இதை வைத்துக் கொள்கிறேன். வாடி கண்ணு!" என்று, நான் என் கைகளை நீட்டினேன்.

"இது டீ இல்லை, டா."

"ஓ! இவனுக்கு என்ன வயது?"

"இருபதே நாட்கள் தான். தாயிடமிருந்து எடுத்து வந்த போது இது ஊளையிட்டது. இன்னும் ஒரு மாதத்துக்கு நீ இதுக்கு பால் மட்டுமே ஊட்ட வேண்டும். இதன் உடல் எப்படி இருக்கிறது?"

"அமாவாசை இரவின் இருட்டுத் தான்" என்று நான் குட்டியை என் கைகளில் எடுத்தேன். என் அம்மாவை அழைத்தேன்.

64