பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"ஏன் இந்தக் கூப்பாடு?" என்று கேட்டவாறு அம்மா அடுப்பங்கரையிலிருந்து வந்தாள். பாட்டியும் வந்தாள். என் கையில் நாய்க் குட்டியைக் கண்டதுமே பாட்டி பின்னுக்கு நகர்ந்தாள். கத்தினாள்: "சீ! இந்தப் பெண்ணைப் பாரேன். நாய்க்குட்டியை சொந்தப் பிள்ளை மாதிரி தூக்கி வைத்திருக்கிறது: கல்யாணம் ஆகிற வயது ஆச்சு, இன்னும் இது வளர வில்லையே!”

நான் பாட்டியைச் சீண்ட விரும்பினேன். குட்டியை முத்தமிட்டேன்.

"அட கடவுளே! பாவப்பட்ட இந்தக் கண்களால் இன்னும் என்னென்ன பார்க்க வேண்டுமோ!" எனப் புலம்பி, பாட்டி திரும்பிச் சென்றாள்.

அம்மாவுக்கு ஒரே வியப்பு. குட்டியைப் பார்த்து, "என்ன அழகு!" என்றாள். "இதுக்கு என்ன பெயர் வைக்கப் பொகிறாய்?"அச்சந்தர்ப்பத்தில் நான் யசோதரா என்றொரு நாடகம் படித்துக் கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் யசோதரையும் ராகுலனும் நிறைந்து நின்றார்கள். எனவே என் மனசில் அலைமோதிய ராகுலன் என்ற பெயரை உச்சரித்தேன்.

அம்மா ஒரு கணம் யோசித்தாள். "சரி. அது நல்ல பெயர் தான்" என ஆமோதித்தாள்.

அன்றிறவு ராகுலன் சரியாகத் தூங்கவில்லை. அவனுக்குப் பிரிவின் ஏக்கம்.

தனது தாய் உடலின் கதகதப்பையும் அன்பையும் இழந்து விட்டானே. நான் ஒரு மூலையில், அவனுக்காக இரு கோணிப்பைகளாலான படுக்கை தயாரித்திருந்தேன். ஆயினும், ராகுலன் இரவு முழுவதும் கத்திக் கொண்டே இருந்தான். அவனைச் சீராட்ட நான் பலமுறை எழுந்தேன். என் கைகளில் எடுத்து வைத்திருந்த வரை அவன் அமைதியாக இருப்பான். ஆனால் விளக்கை அணைக்க வேண்டியது தான் தாமதம், உடனே சிணுங்கத் தொடங்குவான். அன்றிரவு வீட்டில் யாரும் தூங்கவே இல்லை. பாட்டிக்கு மகா கோபம். "சனியன் பிடித்தது. என்னைத் தூங்க விட மாட்டேன் என்கிறதே! இந்த வீட்டில் நான் எப்படி வசிப்பது என் கடைசி நாட்களை இது இப்படிச் சீரழிக்கவா?"

பாட்டியின் முணுமுணுப்புகளை நான் கேட்டவாறிருந்தேன். பிறகு "பாட்டி, இருக்கட்டும் இந்தக் குட்டிக்கு தாயின் நினைப்பு. உனக்குக் கல்யாணம் ஆனபோது பதினோரு வயது என்று நீ சொல்லவில்லையா? உன் புகுந்த வீட்டுக்கு நீபோன அன்று இரவு முழுவதும் உன்னால் தூங்க முடியவில்லை, அழுதுகொண்டே இருந்தாய் என்றாயே ராகுலனும் தன் அம்மாவை நினைத்து அழுகிறான்" என்றேன்.

பாட்டியின் எரிச்சலில் பிரியமும் கலந்தது. "நீ கெட்டிக்காரி தான்.

65