பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் ராகுலனைத் தட்டி, "அசடு, ஒரு ராணியிடம் நடந்து கொள்ளும் முறை இது அல்ல" என்று கண்டித்தேன். நான் பாலை ராகுலனின் தட்டில் ஊற்றி, அதை ராணி முன் வைத்தேன். அது நக்கிக் குடித்தது. ராகுலன் உக்கிரமாக அதைப் பார்த்து, கோபமாய்க் குரைத்தது.

நான் ராகுலனுக்குத் தீனி கொடுப்பதற்காக சென்னாவைக் கூப்பிட்டேன். சென்னா ஒரு கொட்டாங்கச்சியில் சோற்றையும் பாலையும் கலந்து, ராகுலன் முன் வைத்தான். என்னைத் தவிர வேறொருவர் ராகுலனுக்கு உணவு கொடுப்பது இது தான் முதல் முறையாகும். அது தன் முன்னே வைத்த உணவைப் பார்க்க மறுத்தது; ஆனால் ராணி தன்னுடைய தட்டில் தீனி தின்பதை உறுத்து நோக்கியபடி இருந்தது. ராணி தின்று முடித்ததும், நான் கொட்டாங்கச்சியிலிருந்த சோற்றையும் பாலையும் அதன் தட்டில் கொட்டி, அதன் முன்னே வைத்தேன். அது சந்தடி செய்யாமல் தின்றது.

இரவு வந்ததும் ராணி குளிரால் நடுங்கியது. நான் அதுக்காக இரக்கப்பட்டேன். அதை ராகுலனின் படுக்கையில் இட்டேன். ராகுலனுக்கு வேறொரு படுக்கை தயாரித்தேன். ஆனால் அது புதியதில் படுக்க மறுத்து, தரையிலேயே கிடந்தது.

புதிய இடத்துக்குப் பழக்கப்படும்படி ராணிக்குப் பயிற்சிதர வேண்டியிருந்தது. பாட்டியின் சுத்தம் பற்றிய விதிகளை அனுஷ்டிக்கவும், அடுக்களைக்குள் போகாதிருக்கவும் அதற்குக் கற்றுத் தரவேண்டுமே! ஆகவே நான் ராணியுடன் அதிக நேரம் செலவிட்டேன். சென்னா ராகுலனைக் கவனித்தான். மேலும் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் அளவுக்கு ராகுலன் வளர்ந்திருந்தது.

ராணி ராகுலனின் நட்புக்கு ஏங்கியது. அதன் பிரியத்தைப் பெற அது எண்ணற்ற வழிகளில் முயன்றது. ஆனால் ராகுலன் அதை அறவே வெறுத்தது. ராணி அருகில் நெருங்கி வந்தாலே அது பாய்ந்து பிடுங்கியது.

ஒரு மாலை, நான் கல் பெஞ்சில் அமர்ந்து புத்தகம் படித்திருந்தேன். ராணி ஒரு பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது. நான் ராகுலனை அருகில் ஒரு மரத்தில் கட்டியிருந்தேன். ராணி விளையாடு வதை அது கவனித்தது. ராணி பந்தைத் தன் வாயில் கவ்வ முயன்றது. பந்து நழுவி, ஒடிச் சென்றது. ராணி அதைத் துரத்திச் சென்று, அதைப் பற்களால் கவ்வ முயன்றது. பந்து ராகுலன் அருகில் ஒடியது. ராணி தயக்கத்துடன் பந்தை எடுக்க முன்வந்தது. அதை அது எடுப்பதற்குள், ராகுலன் பயங்கரமாய்க் குரைத்து, ராணி மேல் பாய்ந்தது. ராணி உதவி கோரிக் கத்தியது. நான் என் புத்தகத்தை வீசி விட்டு, அதைக் காப்பாற்ற ஒடினேன். ராகுலன் தன் கூரிய பற்களை ராணி கழுத்தில் பதித்திருந்தது.

70