பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சீஅதிவேக பினே
பி.ஆர். பாக்வத்


நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என் வீடு என்பது அவன் கொள்கை. சுற்றித்திரியும் பாணேஷைத் தன் வீட்டின் வாசல் அருகே சந்திக்க நேர்வது விசித்திரம் தான் என்று நந்து நினைத்தான். அந்தத் தற்செயலான சந்திப்பின் அதிவிசித்திர விளைவு, அதிவேக பினேக்குத்தான் ஏற்பட்டது-அதற்குக் காரணம் கூட நந்து தான்.

உண்மையில் பாணேஷ் நந்துவின் வீட்டுக்கு அழைக்கப்படவில்லை. பார்க்கப் போனால், அவர்கள் அறிமுகமானவர்களே இல்லை. அதிவேக பினேயை நந்துவுக்குத் தெரியும், மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தது போல் தான். அவனது வீரமும் உணர்ச்சித் துடிப்பில் செய்யும் தீரச் செயல்களும் பிரசித்தமானவை. கதை அளப்பதில் நந்து நவாதேக்கு இருந்த அசாத்தியத் திறமையை பாணேஷ் கேள்விப்பட்டிருந்தான். கதை சொல்லி நந்து சூன்யத்திலிருந்து பூரண உலகத்தையே படைக்கக் கூடியவன்.

நந்து வீட்டருகில் இருந்த ஒரு பெரிய அற்புதமான கட்டிடத்தின் மொட்டைமாடியில் தான் இவ் இரண்டு சூரர்களும் முதன்முதலாகச் சந்தித்தார்கள்.

பிள்ளைகள் பெரும் கும்பலாய்க் கூடியிருந்தார்கள். புகழ்பெற்ற கோகா மருந்துக் கம்பெனி ஒரு ஒவியப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. சகலவித பிரசார முறைகளையும் கையாண்டு அவர்கள் தங்களுடைய ஜாக் இருமல் மருந்தைப் பிரபலமாக்க முயன்றார்கள். இப்போது, தங்கள் முயற்சியின் உச்ச கட்டமாக, அவர்கள் ஏகப்பட்ட பலூன்களைக் கட்டியிருந்தார்கள்!

அசைந்தாடிய பலூன்கள் ஒரு மலை ஏரியில் மிதக்கும் தாமரைப் பூக்கள் போல் தோன்றின. பலநூறு பலூன்கள்-ரப்பராலும் பிளாஸ்டிக்கினாலும் செய்யப்பட்டவை-மிதந்தன. அவற்றின் முன்னே, வார்த்தைகளும் படங்களும் தீட்டும் நோக்குடன் மிகப்பல பிள்ளைகள்