பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

27


நீ எதைச் செய்வதானாலும் அதில் அறமுறை இருக்க வேண்டும். உன் உழைப்பு அந்த அடிப்படையில் அமையட்டும். வெற்றிக்காக அலைவதிலேயே நீ அதிக ஆர்வம் கொண்டால் நீ தோல்வியைத்தான் நேர்காண நேரிடும்.

தேவையற்ற அச்சம் கொள்ளாதே. எப்போதும் மனச் சோர்வு கொள்ளாதே. வெறும் கற்பனையிலேயே காலத்தைக் கழிக்காதே.

அச்சத்தினால் ஏற்படுவதே இழப்புதான். தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலமே நல்ல பயனை நீ அடைய முடியும். நெருப்புக் கோழி மணலில் தன் தலையை மட்டும் புதைத்துக் கொண்டு உடல் முழுவதையும் வெளியே காட்டிவிடுகிறது. அதுபோலவே ஒரு கோழையின் அச்சமும், அவனை இடர்பாட்டிற்குக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

நம்மால் வெல்ல இயலாது என்று தன் வல்லமையில் நம்பிக்கையின்மை கொள் ப வ ன், தோல்வியை அடைவான். அதே நேரத்தில், தன் ஆற்றலில் முழு நம்பிக்கை கொண்டவன், எந்த வகையான தொல்லைகள், இக்கட்டுகள் நேர்ந்.தாலும் அவற்றைக் கடந்து வெற்றியை அடைவான்.

தற்புகழ்ச்சி நிரம்பிய நம்பிக்கை, முட்டாள்களின் நெஞ்சத்தை மகிழ்விக்கும். அறிவாளி வீணான ஆசைகளுக்கு இடமளிக்க மாட்டான்.