பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


நேர்மையின் அடிப்படையில் உன் ஆசைகள் அமையட்டும். நடைமுறைக்குச் சரிப்படாத ஆசைகளைக் கொள்ளாதே. எதையும் சிந்தித்துத் தன் ஆற்றலுக்கு ஏற்றதாக ஆசைகளைக கட்டுப் படுத்திக் கொள். அதுவே வெற்றிக்கு வழிகாட்டி. நீ ஏமாற்றமடையவோ, சலிப்புக் கொள்ளவோ தேவை ஏற்படாது.

மகிழ்ச்சியும்-துயரமும்

உன் வாழ்வில் மிகுதியான மகிழ்ச்சி கொள்ளாதே. அது உன் அறிவைக் கெடுத்துவிடும். துன்பமும் துயரமும் ஏற்படும்போது மனம் உடைந்து போகாதே. நாம் வாழும் இந்த உலகத்தில் அளவோடுதான் இன்பமும் துன்பமும் பகிர்ந்து தரப்படுகிறன.

அதோ அந்த நல் இன்பம் குடிகொண்ட வீட்டைப் பார். வெளிப்புறத்தில் அது எழிலோடு காட்சி தருகிறது. உள்ளிருந்து வெளிப்படும் கும்மாளமும் அதைக் காட்டுகிறது. வாயிலில் நிற்கும் இல்லத்து அரசி வருபவர்களை எல்லாம் ஆடிப்பாடிச் சிரித்து வரவேற்கிறாள். எல்லோரையும் உள்ளே சென்று இன்பங்களைச் சுவைக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கிறாள். அத்தனை இன்பமும் வேறு எங்கும் கிடைாகாது என்று பெருமையாகக் கூறுகிறாள்.