பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22


மனிதர்கள் மட்டும் அல்ல. வேறு எந்த மிருகமும் அங்கு வருவதே இல்லை. இது குதிரைக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முழுச் சுதந்திரத்துடன் அப்புல்வெளியை அனுபவித்து வந்தது. தனக்காக என்றே கடவுள் படைத்த இடம் அது என எண்ணியது. அந்த இடத்தைத் தனது நிரந்தர இடமாக ஆக்கிக் கொண்டது. அந்த இடம் தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிப் பெருமைப்பட்டது. அந்த மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் ஒடும். துள்ளிக் குதித்து விளையாடும். அதற்கு எப்பவும் ஒரே மகிழ்ச்சி தான்.

ஒருநாள் அந்தக் குதிரைக்குத் தாகமாக இருந்தது. தூரத்தில் இருந்த ஓடைக்குத் தண்ணிர் குடிக்கச் சென்றது.

அந்தச் சமயத்தில் அவ்வழியாக ஒரு புள்ளி மான் ஓடி வந்தது. பசுமையான புல்வெளியைக் கண்டதும் மகிழ்ச்சியால் துள்ளியது. அதற்கு அப்போது மிகவும் பசியாக இருந்தது. பச்சைப் பசேல் எனக் காணப்பட்ட புற்களைக் கண்டபோது நாவில் நீர் ஊறியது. பசும்புல் என்றால் மான் விரும்பி உண்ணும். அதன் பசிக்கேற்ற சுவையான உணவு. மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.