பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

துறைமுகம்

காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகம் பெரியது. அதனில் அரேபியா, கிரீஸ், இத்தாலி முதலிய மேற்கு நாட்டுக் கப்பல்களும் ஜாவா, சீனம், பர்மா முதலிய கிழக்கு நாட்டுக்கப்பல்களும் வந்து தங்குவது வழக்கம். அவை தமிழ்நாட்டுப் பண்டங்களைத் தம் நாடுகட்கு ஏற்றிச் செல்லும்; தம் நாட்டுப் பொருள்களான கண்ணாடிப் பொருள்கள், பட்டாடைகள், குடி வகைகள், பலவகை யந்திரப் பொறிகள் முதலியவற்றை ஏற்றி வந்து இறக்குமதி செய்யும். இப்பொருள்களை இறக்கிக் கணக்கெடுக்கவும், ஏற்றுமதிக்குரிய பொருள் களைக் கணக்கிட்டுச் சோழர் முத்திரையாகிய ‘புலி முத்திரை’ பொறிக்கப்பட்ட மூட்டைகளைக் கப்பல்களில் ஏற்றவும் ஏராளமான மக்கள் துறை முகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர், அங்குச் சுங்கச் சாவடி ஒன்று இருந்தது. இக் காலத்தில் சென்னை போன்ற துறைமுக நகரத்தில் உள்ள துறைமுக நிலையங்களும் சுங்கச் சாவடியும் 1800 ஆண்டுகட்கு முன் நமது பூம்புகார் நகரத்தில் இருந்தன என்பதைச் சுருக்கமாகக் சொல்லலாம்.


2. கோவலன்-கண்ணகி திருமணம்

வணிக அரசர்

பல வளங்களும் நிறைந்து விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர் அரசர்க்கு நிகரான பெருமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். அதற்குக் காரணம் அவர்கள் செய்துவந்த கடல்