துன்ப மாலை
119
ஐயையை நோக்கித் தொடர்ந்து கேட்டாள்; அதற்குமேல் ஐயையால் அடங்கி இருக்க இயலவில்லை. தனக்குத் தெரிந்ததைக் கண்ணகிக்குத் தெரியப்படுத்தினாள்.
“அரசிக்கு உரிய அணி ஒன்றை அபகரித்தான் ஒரு கள்வன்; அவனை அரசனின் ஆட்கள் கொலைசெய்து விட்டனர்” என்று தெரிவித்தாள்.
அவளுக்கு விளங்கியது; 'அணி' அதை ஏந்திச் சென்றது தன் கணவன்; அவனைத்தான் அவர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து சீற்றம் கொண்டாள். எழுந்தாள்; செய்வது அறியாது மயங்கி விழுந்தாள். விரித்த கூந்தலோடு அத் திங்கள் முகத்தினள் நிலத்தில் விழுந்து அலறினாள். செங்கண்சிவக்க அழுதாள்; “எங்கே இருக்கின்றாய்?” என்று கூறி இணைந்து ஏங்கி மயங்கினாள்.
நெஞ்சில் நினைவுகள் அலைமோதின, உணர்வுகள் பொங்கி நெருப்பு எனச் சொற்களாக வெளிப்பட்டன. அநியாயம் அது என்பதை அலறி அறிவித்தாள். விதவைக் கோலம் கொண்டு ஒடுங்கிக் கிடப்பது இது பழையது; எரியில் விழுந்து கரிவது இதுவும் பழகியது; இவற்றை எதிர்த்தாள், பிழை செய்தது அரசன்; கொடுமை இழைத்தது அவன்; இதனைத் தாங்கித் தணிந்து இருப்பது இயலாது என்று கூறிக் கொதித்து எழுந்தாள். அதனை எதிர்க்காமல் இருப்பது தனக்கு வசை என்பதை உணர்ந்தாள்.
பழிச்சொல்லைப் போக்குவது தன் கடமை என்பதை அறிந்தாள். இது அவள் உள்ளத்தில் எழுந்தபோராட்டம்.
இதைப் பலரும் அறிய வெளியிட்டாள்; “கள்வனோ என் கணவன்?” என்று ஆயர் மகளிரை நோக்கி வினவினாள். காய்கதிர்ச் செல்வனை நோக்கிக் கதறினாள். “அநியாயம் இழைத்த இந்த ஊர் அழியும். எரி எழுந்து