பக்கம்:சிலம்பின் கதை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீர்ப்படைக் காதை

159



தூய்மை செய்து விழா எடுத்தான். மஞ்சனநீர் ஆட்டி வெஞ்சின வேந்தன் வெற்றி விழா எடுத்தான். அவன் அமர்ந்து வீரர்களுக்குப் பரிசு தர மண்டபம் அமைத்துக் கொடுத்தனர். அவன் தங்குதற்கு ஏற்ற வகையில் அரண் மனைகளையும், மணி மண்டபங்களையும், பொன்னால் புனையப்பட்ட மேடை அரங்குகளையும், அழகிய பந்தர்களையும், பள்ளி அறைகளையும், பூஞ்சோலைகளை யும், மலர்ப் பொய்கைகளையும், இசைப் பாடல்கள் இருந்து கேட்பதற்குத் தக்க அரங்கங்களையும், பேரிசை மன்னர்க்கு வேண்டுவன பிறவும் ஆரிய அரசர்கள் ஆகிய நூற்றுவர் கன்னர் அமைத்துத் தந்தனர்.

அங்கே வேந்தன் அமர்ந்திருந்து களத்தில் உயிர்விட்ட விரர்களை உளமாரப் பாராட்டினான், அவர்கள் வாரிசுகள் ஆகிய அவர்தம் மக்களுக்கும் சுற்றத்தினருக்கும் பரிசுகள் தந்தான்; உயிருடன் வெற்றி விளைவித்துத் திரும்பிய வீரர்களுக்குப் பரிசுகள் தந்து பாராட்டினான்.

திருவோலக்கத்தில் பெருமிதத்துடன் வீற்றிருந்த அரசனைக் காண அங்கு மாடலன் என்னும் மறையவன் வந்து சேர்ந்தான். “வாழ்க எம் மன்னன்” என்று முதற்கண் சேரனை வாழ்த்தி அவன் பெற்ற வெற்றியைத் தொகுத்துக் கூறினான். “மாதவி மடந்தை கானற் பாணி கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது” என்று எள்ளல் சுவைபடத் தொகுத்துக் கூறினான். “எங்கோ எழுந்த சிறு பொறி அது கொழுந்துவிட்டுப் பெரிதாகிப் போரில் முடிந்தது; வடவரை அடிமைப்படுத்தியது” என்று சொல்திறன் படக் கூறினான்.

அங்குக் கூடியிருந்த மன்னர்களுக்கு இது புதிராக அமைந்திருந்தது; விடுகதை போல விளக்கமற்றுக் கிடந்தது. அரசன் மாடலனை நோக்கி, “பகைப்புலத்து அரசர் பலர் இதை அறியமாட்டார்கள். நகைத்திறம் படக் கூறிவிட்டாய். மறைகற்ற பெரியோய்! நீ கூறிய உரையின் கருத்து யாது? அதனை விரித்துக் கூறுக” என்று கேட்டுக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/160&oldid=936480" இலிருந்து மீள்விக்கப்பட்டது