பக்கம்:சிலம்பின் கதை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீர்ப்படைக் காதை

161



தீயது செய்த வேந்தன் தன் உயிரைவிட்டுப் பாவ மன்னிப்புப் பெற்றுவிட்டான். தன் உடன் வந்த உத்தமர்களுக்கு அழிவு வரத் தானும் உடந்தை என்று கருதிய கவுந்தி அடிகள் அதற்கு ஈடாகத் தன்னை அர்ப் பணித்துக் கொண்டார். உண்ணாநோன்பு ஏற்று உயிரை விட்டார். இது அடுத்த அதிர்ச்சி மிக்க செய்தியாகிவிட்டது.

அடுத்து மாடலன் தன் சொந்த நாடாகிய சோழ நாட்டை அடைந்தான். புகார் நகரில் புகுந்தவன் இதுவரை நடந்த இந்தச் செய்திகளைத் தகுந்தவர்க்கு எல்லாம் எடுத்துச் சொல்ல அவ் அறிவிப்புகள் பலரை உயிர் விடச் செய்தன; சிலரைத் துறவிகள் ஆக்கின; துயரத்தைப் பெருக்கின. கோவலன் தந்தை தம்பால் உள்ள பொருளை உலகினர்க்கு அளித்து வாழ்க்கையை வெறுத்துப் புத்த பள்ளியை அடைந்து துறவியாயினான். அவன் மனைவி உறவுக்கு என ஒருவரும் இல்லாமையால் உயிர் விடுவதைத் தவிர வேறு வழி அறியாதவள் ஆயினாள். மாநாய்கன் தானம் பல செய்து அருக தானத்தை அடைந்து அறங்கள் செய்வதை வாழ்வாகக் கொண்டான். அவன் மனைவி, மகளையும், மருமகனையும் இழந்த துக்கம் தாங்க இயலாமல் ஏங்கி உயிர்விட்டு மறைந்தாள்.

மற்று இச்செய்திகளைக் கேட்ட மாதவி, “என் மகள் இனி நல்வாழ்க்கையை நாடிச் செல்லட்டும்; என்னோடு இந்தப் பழைய வாழ்க்கை மாறுவதாக; என் மகளைக் கணிகையாகக் கணமும் இசையேன். கணிகை வாழ்க்கை அவளைவிட்டு ஒழிக” என்று கூறி அவளைப் புதிய நெறிக்குத் திருப்பிவிட்டாள். தானும் துறவியாவதற்கு உறுதி கொண்டு தலைமுடியை அடியோடு களைந்து புத்த பள்ளியை அவள் அடைந்து துறவறம் மேற்கொண்டு விட்டாள். இந்தச் செய்திகளை எல்லாம் எடுத்துக் கூறிய மாடலன் இப் பின் நிகழ்வுகளுக்கு எல்லாம் தானும் ஒரு காரணமாக இருந்ததற்கு வருத்தம் தெரிவித்தான். இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/162&oldid=936482" இலிருந்து மீள்விக்கப்பட்டது