பக்கம்:சிலம்பின் கதை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாதவி

197



மற்றைய பெண்களைப் போல மகள் ஒருத்தியைப் பெறுகிறாள். எனினும் அது அங்கீகரிக்கப்படவில்லை. கோவலன் பெற்றோர்கள் வந்து அன்பு காட்டவே இல்லை. பிரிந்து வருந்தியிருந்த நிலையிலும் அவர்கள் வந்து ஆதரவு காட்டவில்லை. அன்பு என்பதைப் பெற முடியாமல் போய்விடுகிறது. வாழ்க்கையில் ஒதுங்க வேண்டி நேர்கிறது. அதற்குத்தான் துறவு என்று பெயர் வழங்கப்பட்டது.

தன் மகளுக்கும் அவளால் ஒரு வாழ்க்கை அமைத்துத் தர முடியவில்லை. கலைகளைக் கற்பித்தாள்; அவற்றைக் கொண்டு உலகை மகிழ்விக்க அவள் விரும்பவில்லை. மகிழ்வைவிட 'அருளறம்' ஒன்று உள்ளது என்பதைக் கண்டு அதற்கு அவளை அர்ப்பணிக்கிறாள்.

காவியத்தில் அவளைச் சித்திராபதியின் மகள் என்று அறிமுகம் செய்யவே இல்லை; பெற்றோரால் அவளுக்குப் பெருமை வாய்க்கவில்லை; அவள் கலைச்செல்வம் பாராட்டப்படுகிறது. அதனால் அவள் ஊர்வசி வழி வந்தவள் என்று அறிமுகம் செய்யப்படுகிறாள்.

தனி மனித வாழ்வில் அவள் மதிக்கப்படவில்லை. ஆனால் பொது வாழ்வில் அரசனால் பாராட்டப்படு கிறாள். நிலத் தெய்வம் வியப்பு எய்துகிறது; நீள நிலத்தோர் மனம் மகிழ்கின்றனர். விஞ்சையரும் இங்கு வந்து அவள் ஆடல் கலையைக் கண்டு மகிழ்கின்றனர். விண்ணவரும் மறைந்து நின்று கண்டு மகிழ்கின்றனர்.

ஒருவனுக்குப் பசி; சோறு போடமுடியும்; வேட்கையையும் தணிவிக்க முடியும். ஆனால் காதற் பசிக்குத் தொடர்ந்து தீனி போடுவது என்பது அரிய செயல்; அவன் அவளிடம் எதிர் பார்ப்பது கவர்ச்சி. எப்பொழுதும் அவள் தன்னைக் கோலமொடு வைத்திருக்க நேர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/198&oldid=936519" இலிருந்து மீள்விக்கப்பட்டது