பக்கம்:சிலம்பின் கதை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

சிலம்பின் கதை



அவன் அறிவுப் பசிக்கும் அவள் உணவு இட வேண்டியுள்ளது; அதற்கு மறுபெயர் ஊட்ல்; சுவைபடப் பேசுவது. மாறுபட்டு உரையாடுவது, தூண்டிவிடுவது. கிளர்ச்சி பெறச் செய்வது இதற்குத்தான் ஊடல் என்று பெயர் வழங்கினர். அவளால் அவனுக்கு அந்த விழைவினை ஏற்படுத்த முடிந்தது. தேன் உண்ட வண்டு என அவன் அங்கே சுற்றிக் கொண்டு மயங்கிக் கிடக்கிறான். விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் என்பார் கவிஞர்.

கலவியும் புலவியும் காதலனுக்கு அவள் அளித்து வருகிறாள். சுவைமிக்க வாழ்க்கைதான்; இன்பமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர்கள் அவர்கள். அதற்குத் தடை ஏற்பட்டதும் முறிந்து விடுகிறது. அந்தத் தடை இங்கு ஏற்பட்டது அவமதிப்பு.

காதல் இன்பத்துக்குத் துணை செய்வது; ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டுமன்று; ஒருவரை ஒருவர் மதிப்பது. புகழ்ச்சியில் மயங்கிக் கிடந்த கோவலன் அவனால் இகழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

அச்சத்தின் காரணமாக அவள் சில கருத்துகளை வெளியிட்டு விடுகிறாள். அவன் உறவு நீடிக்குமா என்ற அச்சம் அவளுக்குத் தோன்றி இருக்க வேண்டும். பொதுவான நிலையில் வைத்து ஆடவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்ற கருத்தைத் தெரிவித்து விடுகிறாள். இவள் பாடிய கானல் வரிப் பாடல்கள் அக் கருத்தை அறிவிக்கின்றன. மனம் முறிகிறது; உறவு அறுகிறது.

அந்த அச்சம் நியாயமானதுதான். அவன் அவளை அமைதிபடுத்துவதற்கு மாறாக அவசரப்பட்டு விடுகிறான். அவள் தன்னை நேசிக்கவில்லை என்று தவறாகக் கருதி விடுகிறான். அவளை விட்டுப் பிரிகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/199&oldid=936520" இலிருந்து மீள்விக்கப்பட்டது