பக்கம்:சிலம்பின் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கானல் வரி

41


“என்னை வருத்தியவை அவள் பேரழகு அவள் மொழி; வனமுலை; முகம்; புருவம்; மின்னல் இடை; இவை எல்லாம் சேர்ந்து என்னை வருத்திவிட்டன”

“அவளைக் கடற்கரையில் கண்டேன்; அந்தச் சூழ்நிலை என்னை வருத்தியது; அவள் விரிந்த குழல்; மதி போன்ற முகம், கயல்போன்ற விழிகள் எல்லாம் சேர்ந்து என்னை வருத்துகின்றன.”

“அவள் இளநகை, மதிமுகம், இளையவள் இணை முலைகள் என்னை இடர் செய்துவிட்டன”

“கடல் புகுந்து உயிர் வவ்வுவார் அவள் தலைவர்கள்; அவள் என் உடல் புகுந்து உயிர் வவ்வுகின்றாள்; அவள் விரும்பத்தக்க முலைகள் அவளுக்குச் சுமை; இடை அது சுமக்கிறது; இடர் உறுகிறது”

“வலையால் உயிர் கொள்வர் அவர் தலைவர்கள்; அவள் கண்ணாகிய வலையில் என் உயிரைக் கொள்கிறாள்; மின்னல் போன்றது அவள் இடை, அது முலை சுமக்காது; இற்று விடும்”

“ஓடும் படகு கொண்டு அவள் தலைவர்கள் உயிர்களைச் சாடுவர். அவள் இடை உழந்து வருந்துகிறது; சுமை தாங்காது”

“பவள உலக்கையைக் கையால் பற்றி வெண் முத்தம் குறுவாள்; அவள் கண்கள் குவளையல்ல; கொடியவை”

“புன்னை நிழல் புலவுத் திரைவாய் அன்னம் நடக்க அவள் நடக்கின்றாள்; அவள் கண்கள் கூற்றம் ஆகும்”

“நீல மலரைக் கையில் ஏந்திப் பறவைகளைக் கடிவாள்; அவள் கண்கள் வேலினும் கொடிய வாட்டும் தன்மைய”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/42&oldid=963711" இலிருந்து மீள்விக்கப்பட்டது