பக்கம்:சிலம்புநெறி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஏன்? இலாபம் என்ற குறிக்கோளும் வெறியூட்டும் தன்மையது. இலாபம் மேலும் மேலும் கூட வேண்டும் என்றே இலாப நோக்குடையவர் விரும்புவர். இத்தகு இலாபவெறியரின் தூண்டுதலால்தானே, உணவுப் பொருள்களில் கூட கலப்படம் செய்கின்றனர்; கைநிறைய ஊதியம் பெற்றாலும் கையூட்டின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். ஆதலால், இலாப நோக்கும் மனத் தூய்மைக்குத் துணை செய்யாது.

ஆதலால், தொண்டு மனப்பான்மையுடன் செய்யப்பெறும் அறச் செயல்கள், மனத்துய்மைக்கு வாயிலாக அமையும். இத்தகு அறத்தை-நற்செயல்களை, ஒவ்வொரு வினாடியும் சிந்தனையால், செயலால் உயிர்க் குலத்தினிடத்தில் அன்பு காட்டி, அந்த உயிரினம் வாழ்தலுக்கு உரியவாறு செய்து கொண்டிருக்க வேண்டும்.

அறம் செய்தலுக்குரிய காலம் என்று ஒன்று இல்லை. நாள் தோறும் வீடுகள் கூட்டிச் சுத்தம் செய்யப் பெறுதல் வேண்டும். அங்ஙனம் கூட்டப் பெறாத வீட்டில் கூட்டித் தூய்மை செய்ய இயலாவண்ணம் சில நாட்களில் அழுக்குகள் வந்தடையும். அவ்வழி, நச்சுயிர்களும் வந்து வாழத் தொடங்கும். அதுபோல அன்றாடம் மனத்துய்மை செய்து கொள்ளுதல் வேண்டும்.

ஒரு நாள் அன்பு காட்ட மறந்தால் மறுநாள் அன்பு தலைப்படாது. பகை தோன்றிய உடனேயே அன்பினால் பகையை மாற்றிக் கொள்ளத் தவறினால் மறுநாள் அந்தப் பகை வன்பகையாக உருமாற்றம் பெற்றுப் படிப்படியாக வஞ்சினமாகி, கொலையளவு இழுத்துச் சென்று விடும்.

பகை கண்ட போதே பண்பாட்டு மருத்துவத்தைச் செய்துவிடல் வேண்டும். அப்பொழுதுதான் தீமைகள் மனத்தில் கூடாரமடித்துத் தங்கா ஆதலால் நாழிகை தோறும் நாள்தோறும் மனத்துாய்மை பேணும் அறம் செய்தல் வேண்டும். மேலும் நாளை செய்யலாம் என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/38&oldid=1384651" இலிருந்து மீள்விக்கப்பட்டது