பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

துச் சென்று காட்டினார். மதுரைக் கோவிலையும் வையையையும் கண்டு இன்புற்றார் இளங்கோ.

பின்பு தென்பாண்டி நாடு சென்று பொருநையாறாகிய தாமிரபர்ணியைக் கண்டு களித்தார். பொதிய மலைக்குச் சென்று அதன் எழிலைப்பருகினார். பொதியத் தென்றலின் இன்பத்தை நுகர்ந்தார். திருக்குற்றால அருவியில் ஆடி இன்புற்றார்.

அவர் நகரை விட்டு வந்து பல நாட்களாகி விட்டன. தமிழ்நாட்டின் வடக்கே உள்ள தொண்டை நாட்டுக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. ஆகவே பாண்டி நாட்டைக் கண்டு களித்ததோடு நின்று நேரே வஞ்சிமா நகரை அடைந்தார்.

இடையிடையே தம்முடைய சேரநாட்டின் மலைவளங் கண்டு இன்புற்றார். பேராற்றங்கரை வழியே சென்று பார்த்தார். கடலையும் கழிகளையும், மலையையும் முகடுகளையும், காட்டையும் விலங்குகளையும் கண்டு அவற்றின் அழகைக் கண்ணால் பருகினார். செங்கோடு என்ற மலைமேல் ஏறி அங்குள்ள முருகனைத் தரிசித்தார். தாம் அதுகாறும் மலைநாட்டில் போகாத இடங்களுக்கெல்லாம் போய்வந்தார்.

இளவரசுப் பட்டம் பெற்ற தம் தமையனுருக்கு இத்தகைய பயணம் செய்யும் வாய்ப்பும் ஓய்வும் கிடைப்பது அருமை என்பதை எண்ணியபோது, ‘நல்ல வேளை! நாம் தலைமகனாய் பிறக்காமற் போனோம்!’ என்ற நினைவும் உடன் தோன்றியது. எத்தனை இடங்கள், எத்தனை காட்சிகள் அவற்றைப் பார்த்ததனால் எத்தனை புதிய உண்மைகளை உணர முடிந்தது!