பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அரசன் : சுற்றி வளைத்துப் பேசாதீர். நேரே உண்மையை ஒளியாமல் சொல்லிவிடும்.

சோதிடன் : இன்னும் சில மாதங்களில் மன்னர் பெருமானுக்குப் பொன்னுலகு சென்று தேவர் போற்ற வாழும் வாழ்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

அருகில் இருந்தவர்கள் தம்மை அறியாமலே ‘ஆ!’ என்று கூவினார்கள். சோதிடர், ‘ஏனடா இதைச் சொன்னோம்!’ என்று வருந்தினார்.

அரசனோ, “நல்லது; இறைவன் திருவுள்ளம் அதுவானால் அதை ஏற்றுக்கொள்வதுதானே அறிவாளிகளுக்கு அழகு?” என்றான். தொடர்ந்து, “என் நிலையை உணர்ந்தேன். என் மக்கள் நிலையையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதோ இருக்கும் இரண்டு பேர்களும் என் புதல்வர்கள். இவர்களைப்பற்றி ஏதாவது சொல்லும்” என்று கேட்டுக்கொண்டான்.

சோதிடருடைய கண்பார்வை இளங்கோவின்மே விழுந்தது. அரசனுக்கு வலப்பக்கத்தில் இருந்தவர்களோடு சோதிடர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் இடப்பக்கத்தில் முன்னாலே இளங்கோ வீற்றிருந்தார். ஆதலின் அவரையே முதலில் பார்த்தார்; மேலும் கீழும் பார்த்தார். பிறகு, “இவருடைய அங்க அடையாளங்களைக் கண்டால் இவரே மன்னர்பிரானுக்குப் பிறகு இந்தச் சிங்காதனம் ஏறும் பேறு பெற்றவர் என்று தெரிகிறது” என்றார்.