பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

"எனக்கு மட்டும் சொல்லிக்கொள்வது அன்று இது தங்கள் வாக்கும் அருமையாக இருக்கிறது. துண்டு துண்டாகப் பல பாடல்களை இயற்றுவதைக் காட்டிலும் தொடர்ச்சியாகப் பொருள் அமையும்படி ஒரு பெரிய நூல் இயற்றுவது நல்லது. தாங்களும் யோசித்துப் பார்க்கவேண்டும். ஏதேனும் பொருள் தோன்றினால் பாடத் தொடங்கலாம். இன்ன பொருளை வைத்துப் பாடலாம் என்று எனக்குப் பணித்தாலும் நான் பாடுகிறேன்” என்றார் சாத்தனார்.

“பார்க்கலாம். முதலில் நீங்கள் பாடுங்கள். நீங்கள் புலவர் பெருமான். பாடும் தகுதி உடையவர்கள்” என்று இளங்கோ சொல்லவே, இடைமறித்து, “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் புலவர் அல்லர் என்று யார் சொல்லுவார்கள்? நான் ஒரு வியாபாரி. தாங்கள் துறவி. இருந்தால் என்ன? இரண்டுபேருக்கும் தமிழ் ஒருங்கே உரியது. தாங்களும் பெருநூல் ஒன்றாவது பாட முயல்வது மிக மிக அவசியம்” என்று தீர்மானமாகச் சொன்னார் சாத்தனார்.

இவ்விருவரின் உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்த மாணாக்கர்கள், “இரண்டு பெருமான்களும் இரண்டு பெருநூல் இயற்றித் தமிழ் மக்களுக்கு வழங்கினார் எப்படி இருக்கும் இரண்டும் இரண்டு கண்களைப்போல, இரண்டு சுடர்களைப்போல, இரண்டு கடல்களைப்போல இருக்கும்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.