பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

செஞ்சடைவானவனாகிய சிவபெருமானுடைய திருவருளால் பிறந்தவன் நீ. உன் குணங்களைப் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆதலின் உன்னைப் பார்த்துப் போகலாம் என்று வந்தோம்’ என்றனர்.

“உங்களுக்கு என்னால் ஆகவேண்டியது ஏதேனும் உண்டானால் சொல்லுங்கள்; அதனை நிறைவேற்றுகிறேன்” என்றான் அரசன்.

“நீ இமயத்துக்குப் போகிறாய் என்று கேள்வியுற்றோம். நீ செல்லும் காரியம் இறைவன் அருளால் நிறைவேறுவதாக! இமயத்தில் அருமறை அந்தணர் பலர் வாழ்கின்றனர். அவர்களுக்குத் துன்பம் நேராமல் பாதுகாப்பது உன் கடமை. இது ஒன்றுதான் நாங்கள் வேண்டுவது” என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்கள்.

அப்பால் மன்னனைக் காண்பதற்காகக் கொங்கணத்திலிருந்து கூத்தர்கள் வந்தார்கள். கருநட நாட்டிலிருந்தும் பலர் வந்தனர். குடகு நாட்டிலிருந்து ஆடல் பாடலில் வல்ல மகளிரோடு குடகர் வந்தனர். இப்படி வேறு பலரும் வந்து, “நாங்கள் கூத்திலே சிறந்தவர்கள்” என்றும், “நாங்கள் இசையில் வல்லவர்கள்’ என்றும், “நாங்கள் பலவகை இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்” என்றும் தங்கள் தங்கள் திறமையை எடுத்துச் சொன்னார்கள். அவர்களுடைய தகுதிக்கேற்றபடி அரசன் பலவகை அணிகலன்களும் ஆடைகளும் வழங்கினான். இவ்வாறு, வருபவர்களைக் கண்டும் அவர்களுக்குப் பரிசில்களை அளித்தும் செங்குட்டுவன் அந்தப் பாடி வீட்டில் தங்கியிருந்தான்.