பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

அதைக்கேட்ட சஞ்சயன், “எங்களை அனுப்பிய மன்னர்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டுமானால் பணியுங்கள்; போய்ச் சொல்கிறேன்” என்றான்.

“இமயத்துக்குப் போவதற்கிடையிலே கங்கையாற்றைக் கடக்க வேண்டியிருக்கும். ஆதலின், இந்தப் படை முழுவதும் ஏறி ஆற்றைக் கடப்பதற்கு ஏற்ற வகையில் கப்பல்களை வைத்திருக்கும்படி நூற்றுவர் கன்னரிடம் சொல்லுங்கள்” என்று அரசன் கூறச் சஞ்சயன், அப்படியே சொல்வதாகச் சொல்லி விடை பெற்றுக்கொண்டான். அவனுடன் வந்த காஞ்சுகி மக்களும் தாங்கள் கொண்டுவந்த கையுறைகளையும், வண்டிகளில் வந்த பண்டங்களையும் அரசனிடம் சேர்ப்பித்து விட்டுப் போனார்கள்.

அப்பால் செங்குட்டுவன் தான் தங்கியிருந்த பாடியை விட்டு வடக்கு நோக்கிப் படைகளுடன் புறப்பட்டுச் சென்றான். போகும்போது அங்கங்கே உள்ளவர்கள் அந்தப் படையினருக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தனர். படை கங்கைக்கரையை அணுகியது. அங்கே நூற்றுவர் கன்னர் இந்தப் படையின் பொருட்டு வைத்திருந்த கப்பல்களில் யாவரும் ஏறிக் கங்கையாற்றைக் கடந்தனர். “இவ்வளவு பெரும் படையும் கடப்பதற்கு ஏற்றபடி மரக்கலங்களும் கப்பல்களும் சித்தமாக வைத்திருந்தது, இந்த மன்னர்களின் அன்பைப் புலப்படுத்துகிறது” என்று செங்குட்டுவன் மனம் மகிழ்ந்தான்.

படை வடகரையை அடைந்தவுடன் அங்கே காத்திருந்த நூற்றுவர் கன்னராகிய வேந்தர்கள் சேரனை