பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வீழச் செய்த வீரர் பொன்வாகை பெற்றனர். பகைவரின் தலையை அரிந்து நிலத்தில் விழச் செய்தவர், தம் மார்பிலே புண் பெற்றுப் பகைவர்களின் முதுகு கண்ட வீரர் ஆகியவர் வந்து வாகைப்பூப் பெற்றனர்.

இவ்வாறு சிறப்புச் செய்து முடிப்பதற்கு நெடு நேரமாகி விட்டது. தனக்குக் கிடைத்த வெற்றியினால் உண்டான பெருமிதத்தோடும், வீரர்களுக்குச் சிறப்புச் செய்த மன நிறைவோடும் சேரமான் வீற்றிருந்தான். “அயல் நாட்டுக்கு வந்து போர் செய்து வெற்றி பெற்றது மிகவும் அரிய செயல். இந்த வீரர்கள் இல்லா விட்டால் இந்த வெற்றி கிடைக்க வழியே இல்லை. இந்த வெற்றி எனக்கு மட்டும் உரியது அன்று; எல்லா வீரர்களுக்கும் உரியது. ஒரு வகையில் பார்த்தால் தமிழ் நாட்டு மன்னர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் உரியது என்றே சொல்ல வேண்டும்” என்று பெரு மகிழ்ச்சியோடு அவன் பேசினான்.

அந்தச் சமயத்தில் அங்கே மாடலன் என்னும் அந்தணன் வந்தான். அவன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்; கோவலனுடைய நண்பன். “எம் கோ வாழ்க! மாதவி யென்னும் பெண் பாடிய கானல்வரிப் பாட்டானது கனக விசயர்களின் முடியணிந்திருந்த தலைகள் கல்லைச் சுமக்கும்படி செய்தது. வீரத்தால் நாடுகளை அடிப்படுத்தி ஆண்ட அரசே வாழ்க!” என்று அவன் அரசனை வாழ்த்தினான்.

“பகையரசர்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொன்னீர்களே, நீங்கள் சொன்னதற்கு என்ன பொருள்?” என்று கேட்டான் அரசன்.

“சொல்லுகிறேன். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த கோவலன், மாதவி யென்னும் நாடகக்