பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

"கங்கை நீரில் ஆடுவதற்குக் காரணம் ஏதாவது உண்டா? அன்றி, காரணமின்றியே ஆட வந்தீர்களா?”

"காரணம் உண்டு. கோவலன் இறந்த செய்தியைப் பலருக்குச் சொன்னேன். அது கேட்டுத் துயரம் தாங்காமல் சிலர் இறந்தார்கள். அவர்கள் அப்படி இறப்பதற்கு நான் காரணமாக இருந்தமையால் அந்தப் பாவத்தைப் போக்கும் பொருட்டுக் கங்கை நீர் ஆட வந்தேன்.”

“யார் யாருக்குச் சொன்னீர்கள் ? என்ன நிகழ்ந்தது? சற்றே விரிவாகச் சொல்லவேண்டும். நான் தமிழ் நாட்டை விட்டு வந்து பல நாட்கள் ஆயினமையின் அந்தப் பக்கத்துச் செய்திகளைச் சொல்வார் இல்லை. நல்ல வேளை இப்போது நீங்கள் வந்தீர்கள். எல்லாவற்றையும் அடைவாகச் சொல்லுங்கள்.”

“நான் சொல்லப்போவது நல்ல செய்திகள் அல்ல. இறந்ததும் துறந்ததுமான செய்திகளே அவை.”

“இருக்கட்டும். அதனால் என்ன? நடந்ததைத் தானே சொல்லப் போகிறீர்கள்? சொல்லுங்கள்.”

"கோவலன் கண்ணகியோடு மதுரைக்குச் சென்றபோது ஊருக்குப் புறம்பேயுள்ள ஆயர்பாடியில் அவளை இருத்திவிட்டுச் சென்றான். அங்கே இருந்த ஆயர்குல மகளாகிய மாதரி என்பவள் அவளுக்கு வேண்டிய பண்டங்களைக் கொடுத்துச் சமைத்து உண்னும்படி சொன்னாள்; தாய் போன்ற அன்பைக் காட்டினாள். கோவலன் கொலையுண்டதையும்