பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

பிறகு செங்குட்டுவன் அம்மறையவனுக்குத் தன் நிறையைப்போல ஐம்பது மடங்கு நிறையுள்ள பொன்னைத் தானமாக அளித்தான். நூற்றுவர் கன்னரை அவர்கள் நாட்டுக்குப் போகும்படி விடைதந்து அனுப்பினான். வேறு சிலரை அழைத்து, “தமிழ் மன்னர்களின் ஆற்றலை அறிந்துகொள்ளாது போர் செய்த கனக விசயர்களைத் தமிழ் நாட்டிலுள்ள சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வாருங்கள்” என்று ஏவினான்.

பின்பே துயில் கொள்ளப் போனான், செங்குட்டுவன்.

விடிந்தது. “இனி நாம் நம் நகருக்கு மீளவேண்டும்” என்று அரசன் பணிக்க யாவரும் புறப்பட்டார்கள். அரசனைப் பிரிந்திருந்த மக்களும் அரசியும் மகிழ்ச்சிகொள்ள, வெற்றித் திருவோடும் பத்தினித் தெய்வச் சிலையோடும் அரசன் வஞ்சிமாநகரை அடைந்தான். நகர மாந்தர்கள் யானை வரிசைகளை முன்னிட்டுக்கொண்டு, வந்து வரவேற்றார்கள். அரசனை வாழ்த்தி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.