பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

கண்ணகிக்கு வேண்டிய ஏவலைச் செய்தவள் அவள்; கண்ணகியிடம் பேரன்பு படைத்தவள். அவள் தனக்கு மணம் புரிவார் யாரும் இல்லாமல் கன்னியாகவே இருந்தாள். இம் மூவரையும் கண்ட அவள், “நானும் உங்களுடன் சேர்ந்து வருகிறேன்” என்றாள். நான்கு பேர்களும் கண்ணகி எந்த வழியாக வஞ்சிமாநகருக்குப் போனாளோ அந்த வழியை மேற்கொண்டு நடந்தார்கள். வையையாற்றின் கரை வழியே சென்று மலைநாட்டை அடைந்தார்கள், பிறகு வஞ்சிமாநகர் சென்றபோது, இன்றுதான் கண்ணகி கோயிலில் கடவுள் மங்கலமாகிய பிரதிட்டை நடக்கிறது என்று கேள்வியுற்றார்கள். தக்க காலத்தில் வந்தோம். இதுவே கண்ணகி நம்பால் வைத்திருந்த அன்புக்கு அறிகுறி என்று பெருமகிழ்ச்சியை அடைந்து, யாவரும் பத்தினி கோயிலுக்குச் சென்றனர்.

அங்கே செங்குட்டுவன் இருந்தான். பல பெரியோர்கள் குழுமியிருந்தனர். வஞ்சிமாநகரத்து ஆடவரும் மகளிரும் பக்தியுடன் நின்றிருந்தார்கள். கடவுள் மங்கலத்துக்குரிய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த நான்கு பெண்மணிகளும் கோயிலுக்குள் புகுந்து செங்குட்டுவனைக் கண்டார்கள். அவன் அவர்களை, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.

“வடபேரிமயத்திலே பிறந்து கங்கைப் புனலாடிப் போந்த இந்தப் பத்தினித் தெய்வத்துக்குத் தோழி நான்; காவிரிப்பூம்பட்டினத்தில் கண்ணகியாக இருந்த