பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14. பழக்க வழக்க மரபுகள்

சிலப்பதிகாரக் காலத்தில் மக்களிடையே நிலவி வந்த பழக்க வழக்கங்கள் அதாவது மரபுகள் சிலவற்றை அந்நூலில் கூறியுள்ளாங்குக் காணலாம்.

தலைக்கோல் நகர்வலம் வந்து வழிபாடு ஆற்றிய பின்னரே கணிகையரின் முதல் நடன அரங்கேற்றம் தொடங்கப்பெறும். (அரங்கேற்று காதை):

"வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
(3:120)

..................................................................
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்து"

(3:128)

ஒரு மாளிகையில் புகும்போதோ - திருமண வீட்டில் முதலில் செல்லும்போதோ பெண்கள் வலக்காலை முதலில் எடுத்து வைப்பர். மாதவி அரங்கத்தில் வலக்காலை முதலில் வைத்து ஏறினாள்.

"வலக்கால் முன்வைத்து ஏறி அரங்கத்து"

(3:131)


கனா - நிமித்தங்களில் நம்பிக்கை உண்டு. கனாத்திறம் உரைத்த காதை என ஒரு காதையே உள்ளது.

"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன"

(5:27)

இதனால் நிமித்த நம்பிக்கை உண்டென அறியலாம். மாதவி புணர்ச்சியில் இருந்ததால் அவள் கண்கள் செங்கண்களாகக் கூறப்பட்டன.