பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சுந்தர சண்முகனார்


அரபு நாடுகள் சிலவற்றில், திருடினால் உறுப்பைக் குறைத்தல் போன்ற ஒறுப்புகள் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில அரபு நாடுகளிலும் சோவியத் நாட்டிலும், பிறர் வைத்தபொருள் வைத்த இடத்திலேயே இருக்குமாம்-யாரும் தொடமாட்டார்களாம். போய் வந்தவர்கள் புகல்கின்றனர். உறுப்பைக் குறைத்தல் நம் நாட்டிலும் அன்று இருந்திருக்கிறது. நாலடியாரில் இது கூறப்பட்டுள்ளது. பிறர் மனைவியை விரும்புபவன் அகப்பட்டுக் கொண்டால் அவன் கால்களை வெட்டி விடுவார்களாம். மேலும் பழியும் துன்பமும் விளையும்:

"காணின் குடிப்பழியாம், கையுறின் கால்குறையும்,
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் - நீள்கிரயத்
துன்பம் பயக்குமால், துச்சாரி! நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு" (14)

ஆண்மையின்றித் தீய புணர்ச்சி செய்யின் அச்சமும் நெடுங்கால நரகத்துன்பமும் உண்டாகும். எனவே, ஏ காமுகனே! நீ பெற்ற இன்பம் என்னதான் என்று எனக்குக் கூறு - என்பது கருத்து. 'கையுறின் கால் குறையும்' என்பது எண்ணத்தக்கது.

கையூட்டு (இலஞ்சம்) பெற்ற அரசு அலுவலர் இருவர்க்கு இரழ்சியாவில் (சோவியத்) இறப்பு ஒறுப்பு கொடுக்கப்பட்டதாகச் சில ஆண்டுகட்கு முன் செய்தித்தாளில் படித்த நினைவிருக்கிறது. திருவள்ளுவரும் இதை ஒத்துக்கொண்டுள்ளார். கொடியவரைக் கொலை செய்வது, பயிரைக் கெடுக்கும் களைகளைக் களைவது போன்றதாம்!

"கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்" (550)

என்பது திருக்குறள். இறப்பு ஒறுப்பு தருவதை நிறுத்தி விடவேண்டும் என்றும் சிலர் கூறும் காலம் இது. எல்லாவற்றிற்கும் உரிய காலத்தில் தக்க பதில் கிடைக்கும்: