பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

சுந்தர சண்முகனார்



“நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மென”
(9:72, 73)

என்னும் பகுதியில் கண்ணகியின் உயரிய பண்பு ஒவியப் படுத்தப்பட்டுள்ளது. வந்த கணவனிடம் முகத்தைச் சுளித்துக் காட்டி வெறுப்பு தெரிவிக்காமல், சிலம்புகள் தவிர்த்த மற்ற எல்லா நகைகளையும் இழந்த நிலையிலும், புன்முறுவலுடன் நகைமுகம் காட்டியது அவளது மென்மைக்குச் சான்று.

2. நகர் எல்லையைத் தாண்டி ஒரு காவதம் சென்றதுமே, மதுரை எவ்வளவு தொலைவில் உள்ளது எனக் கேட்டதும் மென்மையே.

3. கடிய கொடிய வழியில் நடக்க முடியாமல் கணவனின் தோள்மேல் தாங்கலாகக் கையைப் போட்டுக் கொண்டு நடந்ததும் மென்மையே.

4 வம்பப் பரத்தனும் பரத்தையும் கோவலனையும் கண்ணகியையும் பார்த்த பின், இவர்கள் யாரெனக் கவுந்தி யைக் கேட்க, என் மக்கள் என்று கவுந்தி கூற, அண்ணனும் தங்கையும் காதலர்களாக இருப்பதுண்டோ என அவர்கள் எள்ளி நகையாடியபோது, அதைக் கேட்கப் பொறாமல் கண்ணகி தன் செவிகளைக் கையால் பொத்திக் கொண்டு கோவலன் முன்னே நடுங்கியதும் மென்மையே.

5. கவுந்தி பரத்தர்களை நரியாகச் சபித்தபோது, கண்ணகி கோவலனுடன் சேர்ந்துகொண்டு, அவர்கட்காக இரங்கிச் சாப விலக்கு செய்யும்படி வேண்டியதும் மென்மையே.

6. ஐயை கோட்டத்தில் தங்கியிருத்தபோது, தெய்வம் ஏறிய சாலினி கண்ணகியைப் பலவாறு புகழ்ந்தபோது, அந்தப் புகழ்ச்சிக்கு நாணிக் கணவன் பின்னால் ஒடுங்கி நின்று புதியதோர் புன்முறுவல் பூத்தாள்: