பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

சுந்தர சண்முகனார்



மேலும் வாயிலோன் தொடர்கிறான்; கணவனை இழந்தவள் என்று கூறிக் கொண்டு கையிலே ஒரு சிலம்பை ஏந்தியபடிப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். அவளை நோக்கின், எருமைத்தலை அசுரனைக் கொன்ற கொற்றவையாகவோ, அறுவர்க்கு இளைய நங்கையாகவோ, சிவனோடு முரணி ஆடிய அணங்காகவோ, கானகம் உவந்த காளியாகவோ, தாருகாகரனது மார்பைக் கிழித்த பெண்ணாகவோ தெரியவில்லை - என்று கூறினான்;

“அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக் கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை யல்லள்
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு, சூருடைக்
கானகம் உவந்த காளி, தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்”
(20:34-41)

என்பது பாடல் பகுதி, வாயிலோன் கூறியிருப்பது, எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை' என்று சொன்ன கதைபோல் இருக்கின்றதன்றோ? வாயிலோன் யார் - யாராக இல்லை என்றானோ - அவர் அவராகக் கண்ணகி தோற்றத்தில் காணப்படுகின்றாள் - என்ற கருத்து இதில் மறைபொருளாக உள்ளது. இதைக் கொண்டு, காளிதான் கண்ணகியாக வந்தாள் எனக் கதை கூறுவாரும் உளர். இது பின்னர் வேறொரு தலைப்பில் ஆராயப்படும்.

இது காறும் கூறியவற்றால், பின்னால் நடந்தன வற்றிற்கு முன்னோட்டமாக இளங்கோ வடிகள் கூறியவை காப்பியத்திற்குச் சுவையூட்டுகின்றன என்று தெளியலாம்.