பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. கோவலன் நிலைமை

சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவன் (Hero) கோவலன். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த மாசாத்துவான் என்னும் பெரிய செல்வ வணிகனின் மகன் கோவலன். இவன் ஆடல் கலையையும் பாடல் கலையையும் சுவைக்கத் தெரிந்தவன்; யாழ் மீட்டி முறையாகப் பாடவும் வல்லவன்; இந்தக் கலைகளோடு காமக் கலைக் களியாட்டத்திலும் ஆர்வம் உடையவன். இதற்கு அவனது செல்வம் பெருந்துணை புரிந்தது. பணக்காரர் வீட்டுப் பையன்கள் சிலர், இந்தக் காலத்திலும் காமக்கலை விரும்பித் திரிவது கண்கூடு.

மங்கல வாழ்த்துப் பாடல்

கோவலன் செவ்வேளாம் முருகன் என மதிக்கத்தக்க செந்நிறமுடைய அழகன்; காணும் கன்னியர் கூட்டம் பாராட்டி மகிழத்தக்க அளவுக்குப் பெருமையும் புகழும் உடையவன். இவனது பதினாறாம் அகவையில் திருமணம் நடைபெற்றதாம். பாடல்

"பெருகிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்
அவனுந்தான்,
மண்தேய்ந்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கும் காதலால்

கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான்"
(1:31-99)