பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

சுந்தர சண்முகனார்


பலரும் இரங்கல்பா பாடினர். பாரதிதாசனும் பாடினார். எவ்வாறு பாடினார்?:-

எங்கள் அன்பான ஆசானே! எமக்குப் போக்கிடம் இல்லாதவாறு மண்ணுலகை மறந்து மறைந்து விட்டீரே. எங்கள் சிற்றறிவை மேலும் விளக்கி ஒளி பெறச்செய்யும் உம்ஆட்சி உரிமையை (அதிகாரத்தை) ஞாயிற்றுக்கு அளித்துப் போய்விட்டீர். நும் அன்பை எங்கள் தாய்மார்களிடம் கொடுத்துச் சென்று விட்டீர். கடல் மடை திறந்தாற்போலும் - விரைந்து கவிபாடும் ஆற்றலை என்றும் ஒலி எழுப்பும் கடலுக்குத் தந்து ஏகினர். உமது புகழை இமயமலைக்கும் பொறுமையை நிலத்திற்கும் நீங்கள் பேசும் இன்சொல்லைக் குயிலுக்கும் விட்டளித்துப் பெரிய பெயருடன் தெய்வமாகிவிட்டீரே - என்னும் கருத்தமைத்துப் பாடியுள்ளார். இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில் அந்தப் பாடல் வருமாறு:

(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

“பூமியை மறந்துவிட் டீரே எமக்கிங்கோர்
     போக்கிலா தாக்கி னீர்எம்
புன்மதி விளக்குமதி காரத்தை நீரிங்குப்
     பொற்கதிர்க் கீந்தி ரேனும்
யாமதைப் புதுமையாக் கொள்வதுண் டோதினம்
     எங்கள்பால் காட்டும் அன்பை
ஈன்றதாய்க் கீந்துசென் றீரெனினும் அன்னதால்
     இதயத்தில் அமுதம் உறுமோ
தாமத மிலாதுகவி பாடிடுங் தன்மையைச்
     சமுத்திரற் கீந்திர் அதுதான்
சாற்றுவது மற்றோர்முறை சாற்றுமோ கீர்த்தியைச்

     சாரிமய மலையில் வைத்துச்