பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

சுந்தர சண்முகனார்


கோவலன் நடுங்கவில்லை-கண்ணகி மட்டும் நடுங்கியது ஏன்? ஆடவன் ஒருவன் பிறர் மனைவியுடன் தொடர்பு கொண்டால் அவனுக்குக் கிடைக்கும் கெட்ட பெயரைவிட, பெண்ணொருத்தி தன் கணவனல்லாத பிறனொருவனுடன் தொடர்பு கொள்ளின் உண்டாகும் கெட்ட பெயர் மிகவும் இழிவாய் நாணத்தக்கது என்பது உலகியலாயுள்ளது. தீய சொல்லைக் கேட்ட கவுந்தியடிகள் கோவலனை இழித்துரைத்ததாகக் கொள்ளாமல், கண்ணகியை இழித்துரைத்ததாகவே கொண்டு தீயோர் இருவரையும் நரிகளாகும்படிச் செய்தார்.

“எள்ளுநர் போலும் இவர்என் பூங்கோதையை
முள்ளுடைக் காட்டின் முதுகரி யாகெனக்

கவுந்தி யிட்ட தவந்தரு சாபம்” (231-233)

என்னும் பாடல் பகுதியில், பூங்கோதையாகிய கண்ணகியை எள்ளியதால் கவுந்தி சாபமிட்டதாகக் கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. இவ்வாறு, ஆண் நடுங்காமல் பெண் மட்டும் நடுங்கும்படியான சூழ்நிலை பெண்ணை எள்ளியதாகவே கவுந்தி எடுத்துக் கொண்ட சூழ்நிலை, பெண் தொடர்பான தாழ்வு மனப்பான்மைக்கு உரிய சான்றாகும்.

கண்ணகியின் இரக்கம்

தீயவர் இருவரும் நரியாகி ஊளையிட, கேட்ட கண்ணகி கோவலனோடு சேர்ந்து, நரியான இருவரும் மீண்டும் பழைய உரு எய்தும்படிக் கேட்டுக் கொண்டாள். இத்தகைய சூழ்நிலையில் ஆண்களினும் பெண்கள் இரக்கம் காட்டுவது மிகுதி. ஏதேனும் துன்பச் செய்தியைக் கேட்கின் ‘ஐயோ பாவம்’ என்று பெண்கள் இரங்கிக் கூறுவர். இங்கேயும், நரிக்குரல் கேட்டு இருவரும் நடுங்கினர் எனக் சொல்லு மிடத்தில், ஆசிரியர்,

“நறுமலர்க் கோதையும் கம்பியும் கடுங்கி” (236)