பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

சுந்தர சண்முகனார்


மாசாத்துவானின் மகன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதோடு, கண்ணகியின் கணவன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

உலகியலில், வேடிக்கையாக ஒருவனைக் குறிப்பிட்டு, ‘அவன் அப்பன் மகன்’ என்று சிலர் கூறுவதுண்டு. எல்லாரையும் ‘அப்பன் மகன்’ என்று வேடிக்கைக்காகக் கூடச் சொல்லிவிட முடியாது. தன் அப்பனைப் போலவே செயல் புரிபவனையே - அப்பனைப் போன்ற இயல்பு உடையவனையே அவ்வாறு கூறுவர். நக்கீரர் என்னும் புலவர் தலைசிறந்த புலவர். அவருடைய தந்தையும் தலைசிறந்த புலவர். மிக உயர்ந்த நக்கீரரைக் குறிப்பிடுவதற்கேகூட, ‘மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்று குறிப்பிட்டுள்ளனர் முன்னோர். மாசாத்துவான் - கோவலன் ஆகியோரைப் பொறுத்த மட்டில்,

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்”
(67)
“மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்லெனும் சொல்”(70)

என்ற குறள் பாக்களுக்கு இங்கே வேலை இல்லை. மற்றும் கவுந்தி இங்கே வீராப்பு – பிகுவு (கிராக்கி) காட்டும் திறமை தெரிகிறது. மாதரியே! இவர்களை நீ ஏளனமாக எண்ணி விடாதே - மாசாத்துவானின் மகனும் மருமகளும் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால், மதுரை வணிகப் பெருமக்கள் இவர்களைக் கொத்திக் கொண்டு (விரைந்து அழைத்துக் கொண்டு) போய்விடுவார்கள். இந்த அளவுக்குச் சிறந்த பெருமையுடைய உயர் குலத்தாராகிய இவர்களை, உயர்வு தாழ்வு கருதாமல், இடைக்குலத்தாளாகிய நின்னிடம் ஒப்படைக்கின்றேன் - இது உனக்குப் பெரிய வாய்ப்பு - என்று ஒருவகைப் பிகுவுடன் அடைக்கலம் தந்தார் கவுந்தி.