பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

சுந்தர சண்முகனார்


கடிஞை = பிச்சைப் பாத்திரம். சுவல் = தோள். அறுவை = உறி. சமணத்துறவிகள் இவற்றைக் கொண்டு செல்லுதல் மரபு.

ஒரு சோலையில் சமணச் சாரணர் வந்து அறவுரை வழங்கியபோது, கவுந்தி உள்ளிட்ட மூவரும் சாரணரின் காலடியில் விழுந்து வணங்கினர். சாரணர், அருகனை வணங்கினால் பிறவி அறும் என்று அறிவுரை கூறினார். அப்போது, அருகக் கடவுளின் பெயர்கள் பலவற்றைப் பின்வருமாறு அவர் கூறினார்:

“அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் என்குணன், பாத்தில் பழம்பொருள்

விண்ணவன் வேத முதல்வன்” (10:176-189)

இவ்வளவு அருகதேவனைக் குறிக்கும் பெயர்களையும் சாரணர் கூறினார். அவற்றைக் கவுந்தி கேட்டார் எனில், அவர் சமயம் சமணமே என்பது விளங்கும். சாரணர் வாயிலாக அருகனை இவ்வாறு பெரிய அளவில் புகழ்ந்திருக்கும் இளங்கோவடிகளின் சமயம் என்ன என்பதையும் உய்த்துணரலாம்.