பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

சுந்தர் சண்முகனார்


செயலினாலேயே பெறலாம் - என்றெல்லாம் கவுந்தி அவனை மறுத்துக் கூறி அனுப்பிவிட்டார்.

கவுந்தி கண்ணகியை மாதரியிடம் அடைக்கலம் தந்தபோது கூட, சாரணர் தொடர்பான வரலாறு கூறியுள்ளார்.

எளிய சிக்கல்

இங்கே ஓர் எளிய சிக்கல் உள்ளது. அது எளிதில் சரிசெய்யக் கூடியதே. அருகனுக்கு மட்டுமே தன் உடலும் உறுப்புகளும் மனமும் வாக்கும் போற்றுதற்கு உரியன என்ற கவுந்தியடிகள், அடைக்கலக் காதையில், கண்ணகியை மாதரியிடம் அடைக்கலம் தந்தபோது, கண்ணகியைக் குறிப்பிட்டு,

“இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” (142-144)

எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இது முன்னுக்குப்பின் முரணாயில்லையா? - என்ற சிக்கல் எழுகிறது. அருகன் கண் காணாத தெய்வம்; எனவே, கண்ணகியைக் கண்கண்ட தெய்வம் என்றார். மற்றும், சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும். மாதரியிடம் அடைக்கலம் தருகின்ற பெண்ணை உயர்த்திக் கூறினால்தானே மாதரியின் மனம் நிறைவு பெறும்? மிக்க நெடுந்தொலைவு - ஒரு நாளைக்கு ஒரு காவதம் வீதம் - பல நாள் கலந்து பழகி வழிவந்தபோது கண்ணகியின் உயரிய பண்பு கவுந்திக்குத் தெரிந்திருக்கு மாதலானும் பொற்புடைத் தெய்வம் என்றார். கவுந்தி கண்ணகியை இவ்வாறு பொற்புடைத் தெய்வம் என்று கூறியதாக அறிவிப்பவர் ஆசிரியர் இளங்கோ அடிகள். கண்ணகி பின்னால் தெய்வமாகக் கோயில் எடுத்து வழிபடப்பட்டவள். இதன்பின் ஆசிரியர் நூல் எழுதினார்.