பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

25


வாயில் காவலன் பாண்டியனிடம் சென்று கூறியது:

“பொற்றொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாளே

கணவனை இழந்தாள் கடையகத்தாளே, என”
(20: 42-44)

இவ்வாறு கூறியது கூறல் நாடகத்திற்கு ஒருவகை ஒலிநயச் சுவை பயக்கிறது. இவை யெல்லாம் நாடகக் கூறுகள் ஆகும். சொல்நயம் பொருள்நயம்போல ஒலி நயமும் நாடகத்திற்கு வேண்டும் அல்லவா? மற்றும், நாடகம் பார்ப்பவர்கள் நாடகக் கதைப் பகுதிகளை நடிகர்களின் வாயிலாகவே அறிந்துகொள்வது போல், இயற்கைக் காட்சிப் புனைவுகள் நீங்கலாக, மற்ற கதைப் பகுதிகள், சிலம்பில் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பேச்சைக் கொண்டே அறியும்படி அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒன்று:- இந்தக் கால நாடகங்களில்-திரை ஓவியங்களில், முன்னால் நடந்த நிகழ்ச்சிகளுள் சில, நாடகத்தின் இடையிலோ - முடிவிலோ அறிவிக்கப்படுதல் போன்ற அமைப்பு சிலம்பிலும் உள்ளது. ஓர் எடுத்துக்காட்டு: கோவலன் இளமையில் ஆற்றிய கொடைச் செயல், இரக்கச் செயல், துணிவுச் செயல் முதலியன, பதினைந்தாவது காதையாகிய அடைக்கலக் காதையில் சாவதற்கு முன் மாடலன் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சிறந்த நாடகக் கூறுகளாகும்.

எனவே, இயல் இசை நாடகப் பொருள் தொடர் நிலைச் செய்யுள் காப்பியம் என்னும் மணி மகுடம் சிலப்பதிகாரத்திற்குச் சூட்டப்பட்டிருப்பது நனிசாலும்.