பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

287


எப்படி வேண்டுமானாலும் பாடுவாள். இந்தக் குறிப்பும் ஈண்டு கருதத்தக்கது.

மேலும் ஒரு குறிப்பு சிலப்பதிகாரத்திலேயே உள்ளது. அதாவது - கோவலன் காட்டு வழியில் ஒரு நாள் காலைக் கடன் கழிப்பதற்காக ஒரு நீர் நிலையை அடைந்தான். அங்கே, மாதவி தந்த மடலை எடுத்துக்கொண்டு கோசிகன் என்பவன் கோவலனிடம் கொடுத்தான். மடலைக் கோவலன் படித்துப் பார்த்து மாதவி ‘தன் தீது இலள்’ (13, 94) என்று எண்ணித் தளர்ச்சி நீங்கினானாம். தன் தீது இலள் என்பதற்கு, மாதவி மனமும் உடம்பும் துன்பம் இன்றி நலமாயிருக்கிறாள் என்று பொருள் செய்தல் பொருந்தாது; ஏனெனில், இப்போது துன்பத்துடனேயே மடல் அனுப்பியுள்ளாள். மற்றும் இதற்கு, மாதவிமீது ஒரு குற்றமும் இல்லை என்று பொருள் செய்தலும் பொருந்தாது; ஏனெனில், மாதவியோடு இருந்த காலத்தில் செல்வம் தொலைந்து விட்டது - அவளும் மற்றொருவன் மீது காதல் உடையவளாகப் பாடினாள் - என்ற காரணத்தினால்தானே பிரிந்தான் - எனவே, அவள் குற்றம் உடையவள் என்பதே கோவலன் கருத்தாக இருக்க முடியும். அங்ஙனம் எனில், ‘தன் தீது இலள்’ என்பதற்கு உரிய உண்மைப் பொருள் யாது?

கைக்குக் கை மாறும் கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி, நான் பிரிந்த பிறகும், கானல் வரியில் பாடியபடி வேறொருவனை விரும்பாமல் - நம்மை மறவாது - நம்மை விடாமல் நமக்கு மடல் அனுப்பியதிலிருந்து, அவள் திய செயல் இல்லாது - கற்புடையவளாகவே உள்ளாள் எனத் கோவலன் எண்ணியதாகப் பொருள் கொள்ளல் வேண்டும். இதனாலும், மாதவி கணிகையர் வகுப்பைச் சேர்ந்தவள் என்ற குறிப்பு கிடைக்கலாம்.