பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

சுந்தர சண்முகனார்


இந்நாட்டில், தேவந்தியைப் பூசாரினியாக்கியது புதுமைப் புரட்சியாகும்.

2. மாங்காட்டு மறையவன்

மாங்காட்டு மறையவனுக்குச் சிலம்பில் பெயர் தெரிவிக்கவில்லை. ஏதாவது ஒரு பெயர் இல்லாமலா போகும்? பெயர் வேண்டா மறையவன் போலும் இவன். சேரநாட்டுக் குடகுமலைப் பகுதியில் உள்ள மாங்காடு என்னும் ஊரினனாகிய இவன், கோவூர் கிழார், ஆலத்துளர் கிழார் முதலிய பெயர்களைப் போல ஊர்ப்பெயராலேயே குறிப்பிடப்பட்டுள்ளான். உறையூர் இளம்பொன் வணிகனார் என்பது போல் குலப்பெயராலும் குறிப்பிடப்பட்டுள்ளான். இதனால், அந்தக் காலத்தில், ஊர்ப் பெயராலும் குலப்பெயராலும், இரண்டன் பெயராலும் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டதும் உண்டென அறியலாம். இவன் வைணவ அந்தணன், ஊர் சுற்றிப் பார்க்கும் ஆர்வம் உடையவன்.

கவுந்தி, கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் உறையூரைக் கடந்து செல்லும் வழியில் ஒர் இளமரக்காவில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது, பாண்டியனையும் அவன் நாட்டையும் புகழ்ந்து வாழ்த்திக் கொண்டு மாங்காட்டு மறையவன் அங்கு வந்தான். அவனைக் கண்டு, கோவலன், நின் ஊர்.பேர் விவரம் சொல்லுக என்று வினவினான். அதற்கு மறையவன், நான் குடகுமலைப் பகுதியில் உள்ள மாங்காடு என்னும் ஊரினன். திருவரங்கத்தில் அறிதுயில் கொள்ளும் அரங்கனையும், திருவேங்கடத்து எழுந்தருளியுள்ள வேங்கடத்தானையும் காட்டுக என்று என் கண்கள் வற்புறுத்தியதால் புறப்பட்டு ஊர் சுற்றி வருகிறேன் என்றான். மதுரைக்குச் செல்லும் வழி அறிவிக்கும்படிக் கோவலன் வினவப் பின்வருமாறு மறையவன் அறிவிக்கலானான்: