பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26. புகார் - சோழர் சிறப்புகள்

நூலின் தொடக்கத்திலேயே - பத்தாம் அடியிலேயே 'பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்' என இளங்கோ புகாரைப் போற்றியுள்ளார். காவிரிப்பூம்பட்டினத்தின் மற்றொரு சுருக்கமான பெயர் புகார். இந்தக் காலத்தில் பட்டணம் போகிறேன் என்றால் சென்னைக்குப் போகிறேன் என்று சொன்னதான பொருள் படும். அந்தக் காலத்தில் பட்டணம் போகிறேன் என்று சொல்லியிருந் தால் புகாருக்குப் போகிறேன் என்று சொன்னதான பொருள் கொள்ளப்பட்டிருக்கலாம்.

இளங்கோவின் ஏமாற்றம்

பொதிய மலையிலும், இமய மலையிலும், குடிமக்கள் என்றும் வேறிடத்துக்குப் பெயர்ந்து செல்ல வேண்டாத அளவுக்கு வாய்ப்பு வசதிகள் நிறைந்ததும் தனக்கென்று தனிச்சிறப்பு உடையதுமாகிய புகாரிலும் சான்றோர்கள் இருப்பதால், இந்த மூன்று இடங்களும் என்றுமே அழிவு என்பதின்றி நிலை பெற்றிருக்கும் என்று - முற்ற முடிந்த நூலறிவும் பட்டறிவும் உடைய சான்றோர் கூறுவர் என இளங்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே" (1:14 - 19)