பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

339


என்பது பாடல் பகுதி. அறவோர், தவசியர், முனிவர் முதலிய நல்லோர் இருக்கும் பகுதியில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒரு துறையில் நீர் அருந்தும், புலியும் மானும் ஓரிடத்தில் உறங்கும் என்பன போன்ற கற்பனைகளைப் புலவர்கள் புகல்வது இலக்கிய மரபு. இந்த மரபைப் பல நூல்களில் காணலாம். இவ்வாறு இங்கே, இளங்கோ கோவலன் வாயிலாகக் குரல் கொடுத்துள்ளார். தக்க குறிக்கோளுடனேயே ஆசிரியர் இங்கே இச்செய்தியைக் கூறியுள்ளார். அது பின்னர் விளக்கப்படும்.

கோவலன் நடைவழியில் வந்த பாணர்களோடு எளிமையாய்ப் பழகித் தானும் பாடினான். மதுரை இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது என அவர்களை வினவினான். அவர்கள் இறுத்த விடையாவது:-

மதுரையில் உள்ள பலவகை நறுமணக் குழம்புகளிலும் நறுமண மலர்களிலும் நறுமணப் புகைகளிலும் தோய்ந்த மதுரைக் காற்று இதோ நம்மேல் வீசுகின்றது. புலவர்களால் போற்றப்பட்டிருப்பினும் நறுமணப் பொருள்களுடன் கலவாமையால் தென்றல் காற்று இந்த மதுரைக் காற்றிற்கு ஒப்பாகாது. மதுரைக் காற்று நம்மேல் வீசத் தொடங்கி விட்டதால், பாண்டியனது மதுரை மிகவும் அண்மையில் உள்ளதென அறியலாம். தனியாகப் பயணம் செய்யினும் யாரும் மறித்துத் தொல்லை தர மாட்டார்கள். அத்தகைய பாதுகாப்பானது வழி. நீங்கள் இரவிலும் செல்லலாம் என்று அவர்கள் கூறினர்.

"புலவர் செங்காப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது ஈங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்று அவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினும் தகைக்குநர் இல்" (13:130 - 134)