பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

341


மாறாக' ஒலிக்க என்பது தான் அந்தப் பொருள். இது ஒரு வேடிக்கைப் பொருளே.

பின்னர் மூவரும் வையை ஆற்றை அடைந்தனர். ஆற்றில் தண்ணீர் தெரியவில்லை. கண்ணகிக்குப் பின்னால் நிகழவிருக்கும் இறப்பினை முன் கூட்டி அறிந்தவள் போலவும் வருத்தத்துடன் இவர்களைப் பார்க்க விரும்பாதவள் போலவும் வையை என்னும் நல்லாள் தன் உடல் முழுவதையும் போர்வையால் மறைத்துக் கொண்டாள். போர்வை எது? பல்வேறு மண மலர்கள் தண்ணிரில் அடித்துக் கொண்டு மிதந்து வருவதால், அந்தத் தோற்றம் போர்வையால் மறைத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. மேலும், வையை நல்லாள் கண்ணிரை வெளிக்கொணராமல் அடக்கிக் கொண்டாளாம்:

"வையை என்னும் பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி" (13:170-173)

என்பது பாடல் பகுதி. 'கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி' என்பதற்கு இருபொருள் தந்துள்ளார் இளங்கோ. கண் என்பதற்கு இடம் என்னும் பொருள் உண்டு. வையை தன் இடத்தில் நிறைந்துள்ளதும் நெடுந்தொலைவிலிருந்து வந்து கொண்டிருப்பதுமாகிய தண்ணிரை, கரையைக் கடந்து மேலேறி எதையும் அழிக்காமலும் இவர்களையும் அச்சுறுத்தாமலும் அடக்கிக் கொண்டதாம். இந்தத் தொடரில் இரு பொருள் (சிலேடை) அணியும் தற்குறிப்பேற்ற அணியும் உள்ளன. வையை இயற்கையாக மலர்களால் மூடப்பட்டுக் கரை கடக்காமல் செல்வதற்கு, இவர்கட்காக அவ்வாறு செய்வதாக ஆசிரியர் தாமாக ஒரு காரணம் குறித்து ஏற்றியிருப்பதால் இது தற்குறிப்பு ஏற்ற அணி அமைந்துள்ளதாகிறது.