பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

சுந்தர சண்முகனார்


வெல்லும் பாண்டியர் குலத்திற்கு முதல்வனாயிருத்தலினாலாம். பாண்டியர்கள் மதி குலத்தவர் எனப்படுவர்.

"இளைய ராயினும் பகையரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுத லாகலின்
அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்பெறிந்து ஓட்டிப்
பான்மையின் திரியாது பால்கதிர் பரப்பி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து" (4:21-26)

என்பது பாடல் பகுதி. பாண்டியர்கள் இளம்பருவத்திலே பகைவர்கள் எதிர்த்துவரினும் அவர்களை வெல்பவராம். இந்தக் கருத்து புறநானூற்றுப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது. பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியுள்ளார். இடி சிறிய அளவினதாயினும் பெரிய பாம்புக்குலத்தைப் பூண்டோடு அழித்தல்போல், பகைவரை அழிக்கக் கூடிய பஞ்சவர் (பாண்டியர்) ஏறு எனப் பாடியுள்ளார்.

"இளைய தாயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே நீயே" (58:6-8)

அளவில் சிறிய இடி என்னும் உவமையால் பாண்டியர் சிறு பருவத்திலேகூடப் பகை வெல்வர் என்னும் பொருள் அறியவரும். மற்றும் ஒன்று:- பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றுார் கிழார் பாடியுள்ளார். நெடுஞ்செழியன் சிறுவனாம்; காலில் குழந்தைகட்குரிய கிண்கிணி அ ணி ந் தி ரு ந் தா னா ம். குழந்தைக்குக் காப்பளிக்கும் ஐம்படைத் தாலி கழுத்தில் பூண்டிருந்தானாம். இந்த நிலையில், பகைவர்கள் வந்து விட்டார்கள். உடனே சிறுவன் பாண்டியன் காலில் கிண் கிணியைக் களைந்து மறக்கழல் கட்டிக் கொண்டானாம்;