பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

349


"மறைநா ஓசை பல்லது யாவதும்
மணிகா ஓசை கேட்டதும் இலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்" (23:31-34)

என்பது பாடல் பகுதி. மேலும் கூறுகிறாள்: பாண்டியர் குடி பெண் பழி இல்லாதது. கீரந்தை என்னும் பார்ப்பனனின் மனைவி தொடர்பான பழி வரக் கூடாது எனத் தன் கையைக் குறைத்துக் கொண்ட பொற்கைப் பாண்டியனது மரபில் வந்தது பாண்டியர் குடி. தன் ஏவலர் தவறாகச் சிறையில் அடைத்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறை விடுத்ததுமன்றி, சிறையிலுள்ள அனைவருக்கும் விடுதலை தந்த பாண்டியர் வழி வந்த குடி இது.

எனவே, நின்னால் குற்றம் சுமத்தப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் "ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடிப் பிறந்தோன்" (23:40) என்றெல்லாம் பாண்டியனைப் பாராட்டிப் புகழ்ந்தாள் மதுராபதி.

பாண்டியர், வடக்கே உள்ள பொன்மலையை (மேரு மலையைத்) தம் வட எல்லை யாக்கியவர்களாம். இதை, "பொற் கோட்டு வரம்பன்" (23:12) என்னும் தொடரால் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

"தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந் தாயினான்" (29:10)

என்று, தெய்வமாகி விட்ட கண்ணகி கூறியதாக இளங்கோ இயம்பியுள்ளார்.

வளைந்த கொடுங்கோலைத் தன் உடலினின்றும் பிரிந்த உயிரினால் நிமிர்த்திய பெருமை பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு என்றும் உண்டு.