இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
360
சுந்தர சண்முகனார்
என்னும் பகுதிகளால் செங்குட்டுவன் சைவ சமயத்தவன் என்பது அறியப்பெறும். நிலவு முடித்த சென்னி உயர்ந்தோன் - செஞ்சடை வானவன் - ஆணேறு ஊர்ந்தோன் - செஞ்சடைக் கடவுள் - என்பன சிவனைக் குறிக்கும். செங்குட்டுவன் சைவன் எனினும், பிற சமயங்களின் எதிரியல்லன். முதன்மை சைவத்திற்கேயாம்.
மொழிப்பற்று
செங்குட்டுவன் தாய்மொழியாகிய தமிழில் மிக்க பற்றுடையவனாக இருந்தான். தமிழர்களின் மறத்தை - ஆற்றலைச் செங்குட்டுவன் தமிழ் மொழிமேல் ஏற்றி
“காவா நாவின் கனகனும் விசயனும் ...
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்” (26. 159, 161)
என்று கூறியதாக இளங்கோ எழுதியுள்ளார். மேலும் இளங்கோ ‘தென்தமிழ் ஆற்றல் காண்குதும்’ (26. 185), செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் (27:5) எனப் பாடியுள்ளார். தமையனுக்கு இருந்த தாய்மொழிப் பற்று தம்பிக்கும் இருந்திருக்கின்றது. அந்தோ தமிழே!