பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

சுந்தர சண்முகனார்


எனவும், பெருங்கதையில்

“இல் லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
பெருமணம் கமழவும்”
(1:33:13, 74)

எனவும், மற்றும் பல இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல்களின் அடிப்படையில், ஒட்டக் கூத்தர் தக்க யாகப் பரணி என்னும் நூலில் உமாதேவிகூட முல்லை வளர்த்ததாகப் பாடியுள்ளார். உமாதேவி வளர்க்கும் முல்லைக் கொடி நூறாயிரமாகக் கிளைத்து விண்ணில் சென்று திங்களைத் தடவுகின்றதாம். திங்களிலுள்ள கறையாகிய மான், தேவி வளர்க்கும் முல்லை என அஞ்சி அதை மேயவில்லையாம்.

“நுதிக்கோடு கூர்கலை உகைப்பாள் விடாமுல்லை
நூறாயிரம் கிளைகொடு ஏறா விசும்பிவர்
மதிக்கோடு தைவர எழுந் தண் கொழுந்துகளை
வாயாது எனக்கொண்டு மேயாது மான் மறியே”
(75)

என்பது பாடல். கற்புடைய பெண்டிர் வீட்டில் முல்லை வளர்ப்பதால், முல்லைக்குக் ‘கற்பு’ என்னும் பெயரும் உண்டென ஆசிரிய நிகண்டு (137) கூறுகிறது. மேலும் பல இலக்கியங்களில் முல்லையும் கற்பும் இணைக்கப்பட்டுள்ளன.

புகழ் வெண்மை

புகழின் நிறம் வெண்மை என்று கூறுவது இலக்கிய மரபு. சிலம்பில் உள்ள

“அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து”
(4:23 - 26)

என்னும் பகுதியில் உள்ள விளக்கம் என்பதற்குப் புகழ் என்னும் பொருளும் உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். புகழ் வெள்ளியாய் - வெள்ளை நிறத்ததாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது.