பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

379



நாள் தொடர்ந்ததாம். செங்குட்டுவன் கணகவிசயரை வென்ற போர் பதினெட்டு நாழிகையே எடுத்துக் கொண்டதாம்:

"உயிர்த்தொகை யுண்ட ஒன்பதிற் றிரட்டிஎன்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள்" (27:8-10)

ஒன்பது x இரட்டி (9x2=18) பதினெட்டு. தேவ அரக்கர்போர் 18 ஆண்டு - இராமாயணப் போர் 18 மதி - பாரதப்போர் 18 நாள் - சேரன் வென்ற போர் 18 கடிகை (நாழிகை) எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இரண்டரை (2:) நாழிகை ஒரு மணியாகும். இந்தக் கணக்கின்படிப் பார்க்கின், ஒரு (சுமார்) ஏழேகால் (7.12) மணி நேரத்தில் சேரன் பொருது வென்றான் என உய்த்துணரலாம்.

முடி ஏறுதல்

சேரன் செங்குட்டுவனுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறிய மாடலன், இறுதியாக, வடபுல மன்னரின் முடிமேல் கண்ணகி ஏறினாள் - என்று கூறினான்:

"குடவர் கோவே ... ... ... ... ....... ...
வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்" (27:64, 65)

கண்ணகியின் சிலை செய்யும் கல்லை வடபுல மன்னர்களாகிய கனகவிசயர் சுமந்ததை, கண்ணகி அவர்களின் முடியில் ஏறினாள் என நயம்படக் கூறியுள்ளார். சிலை செய்வதற்கு முன்பே, உறுதி கருதிக் கல் கண்ணகியாக ஆக்கப்பட்டதாகச் சிறப்பித்து மொழியப்பட்டுள்ளது.

கல் என்று நினைத்தால் கண்ணகி மறக்கப்படுவாள் - கண்ணகி என்று எண்ணின் கல் மறைந்துவிடும். இப்போது கோயில்களில் உள்ள சிலைகள் எல்லாம், கல் என்பது மறக்கப்பட்டுக் கடவுளாகக் காட்சி தருகின்றன.